Sunday 8 April 2018

இந்துத்வாவின் சுயரூபம்


இந்துத்வாவின் சுயரூபம்

உதயசங்கர்
பார்ப்பனீயத்தின் பூர்வ சரித்திரத்தை ஆராய்ந்தோமானால் இன்றைய அவர்களுடைய பாசிசக்குணத்துக்கான வேர்கள் தென்படுகிறது. கி.மு.1500-லிருந்து ஆரிய இனக்குழுக்கள் வட இந்தியாவின் வடமேற்குப்பகுதி வழியாக உள்ளே நுழைந்தார்கள். ஈரான், பெர்சியப்பகுதிகளிலிருந்து நாடோடிகளாக சொந்த நிலம் இல்லாதவர்களாக, ஆடுமாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் தேடி அலைந்தார்கள், சூரிய சந்திரர், நட்சத்திரங்கள், வானம் இவற்றின் மாறுபாடுகளை மட்டுமே அறிந்தவர்கள் அவர்கள். போகும் இடமெல்லாம் நெருப்பைச் சுமந்தார்கள். ஆரிய இனக்குழுக்களின் அறிவு, தெய்வங்கள், கலாச்சாரம்,எல்லாம் வானம் சார்ந்தே இருந்தது. எனவே தான் அவர்களுடைய கடவுள்களான இந்திரன், அக்னி, வாயு, வருணன், இடி, மின்னல், சூரியன், சந்திரன், ராகு, கேது, என்று எல்லோரும் வானத்திலேயே இருந்தார்கள். வானத்தில் இருக்கும் அவர்களை வணங்க நெருப்பை வளர்த்து அதில் பலி பொருட்களை ஆகுதியாக்கி வழிபட்டனர். ரிக் வேதப்பாடல்களில் எல்லாம் யாகச்சடங்குகளைப் பற்றிய விவரணைகள் இருப்பது யதார்த்தமானதில்லை.
ஆரிய இனக்குழுக்கள் இரவு நேரங்களில் தங்குமிடங்களில் பாதுகாப்புக்காக, சமைப்பதற்காக நெருப்பை வளர்த்தார்கள். அந்த நெருப்பை உருவாக்கவும், பாதுகாக்கவும், சிலர் நியமிக்கப்பட்டார்கள். அப்படி நியமனமான நெருப்புப்பாதுகாவலர்கள் தான் புரோகிதர்களாக பின்னர் உருவெடுக்கிறார்கள். வளர்ந்த நெருப்பைச் சுற்றி உட்கார்ந்து, ஆடிப்பாடி, அவர்களுடைய பூர்வசரித்திரம், கலாச்சாரம், தெய்வ வழிபாடுகள், வாழ்க்கைவட்டச்சங்குகள், பிறப்பு, இறப்பு, பழக்கவழக்கங்களை பாடல்களாக மனனம் செய்து பாடிய ஒரு கூட்டமாக புரோகிதர்கள் மாறினார்கள். இப்படி மாறிய புரோகிதர்களே வேதங்களை இயற்றினர்.
இந்த ஆரிய இனக்குழுக்கள் சிந்து சமவெளிப்பிரதேசத்துக்குள் நுழைகிறார்கள். சிந்துசமவெளி, நதிக்கரை நாகரிகம், நதி, மண், செழுமை, வளர்ச்சி, பல்லுயிர் பெருக்கம், செடி,கொடி, பயிர், விளைச்சல், பெண் தெய்வங்கள், விவசாயம், என்று முழுக்க முழுக்க பூமித்தாயின் பன்மைத்தன்மையுடன் சிறந்து விளங்கிய நாகரிகம். ஒற்றைத்தன்மையுடைய நிரந்தரச்சூன்யமான, எல்லையற்றதான வான்வெளியும், உயிர்த்துடிப்புள்ள மாறிக்கொண்டேயிருக்கிற பன்மைத்தன்மை கொண்ட பூமியும் எதிர் எதிராக நின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தின் பன்மைத்தன்மையைக் கண்டு பொறாமை கொண்ட ஆரிய இனக்குழுக்கள் தங்களுடைய ஒற்றைத்தன்மையும், பாழ்வெளியுமான வானத்தை உயர்வாக, புனிதமாக, கற்பிதம் செய்தனர். அதனால் தான் பல்லுயிரைப் பெருக்கும் பூமியை, மண்ணை, அதில் வேலை செய்யும் தொழிலாளர்களைத் தாழ்வாக, தீட்டாகக் கற்பிதம் செய்தனர். அவர்களைச் சூத்திரப்பிரிவினராகவும், தீண்டத்தகாதப்பிரிவினராகவும், திட்டமிட்டு பிரித்தனர்.
எனவே தான் இன்றும் பார்ப்பனீயம் யாகச்சடங்குகளை முதன்மையாகக்கருதுகிறது. அவற்றைப்புனிதச்சடங்குகளாக மக்கள் மனதில் நிலைகொள்ள வைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. மண் சார்ந்த பண்பாட்டுச்சடங்குகளை தாழ்வான இடத்தில் வைப்பதிலும் வெற்றி பெற்றிருக்கிறது.
எல்லாமதங்களிலும் பிரபஞ்சத்தின் தோற்றம், பூமியின் தோற்றம், உயிர்களின் தோற்றம், மனிதகுலத்தோற்றம், எல்லாவற்றைப்பற்றியும் கதைகள் இருக்கும். ஆரியமதத்திலும் அத்தகைய கதை ரிக்வேதப்பாடல்கள் பத்தாவது தொகுதியில் 129 – ஆவது பாடலாக ” படைப்பு குறித்த பாடல் “  இயற்றப்பட்டிருக்கிறது. அதில் ஒரு ஏகம் உருவமற்ற பருப்பொருள் இருந்தது. அதுவே வெப்பத்தினாலும் காமத்தினாலும் தன்னை ஒருபிரபஞ்சமாக உருமாற்றிக்கொண்டது.
வர்ணாசிரமக்கோட்பாடுகளுக்கு ஆதரவாக பின்னால் இடைச்செருகலாக ரிக்வேதப்பாடல்களில் சொருகப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிற புருஷ சூக்தா ஒரு யாகச்சடங்காகவே தொடங்குகிறது. தேவர்கள் சேர்ந்து புருஷன் என்ற மகாமனிதனை யாகத்தில் பலியிட, அந்த யாகவேள்வியிலிருந்தே இந்தப்பிரபஞ்சமும், உலகமும், உயிர்களும், மனிதர்களும் தோன்றினார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்படிச்சொல்லும்போதே நான்கு வர்க்கங்களும்( பின்னால் வருணங்கள் ) தோன்றின என்று சொல்வதன் மூலம் வர்ணாசிர்மக்கோட்பாடுகளுக்கு ஒரு பழமையையும், பாரம்பரியத்தையும் உருவாக்குவதற்கான முயற்சியும் நடக்கிறது.
கி.மு.1500-வாக்கில் உள்ளே வந்த ஆரிய இனக்குழுக்கள் கி.மு. 1900- வாக்கில் வேதங்களை எழுதுகிறார்கள். அதற்கு முன்னால் அவை வாய்மொழிப்பாடல்களாக தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டிருக்கலாம். ஏகம் என்றால் கடைசி உண்மை ஒன்று. ஆரிய இனக்குழுக்களின் தத்துவார்த்தமாக இன்றுவரை கடைப்பிடிக்கின்றனர். கி.மு.700-ஆம் ஆண்டு வாக்கில் உருவாக்கிய உபநிடதங்களில், தங்களைப்பற்றிய உயர்வு, புனிதம், தனித்துவம், ஆகிய உள்ளடக்கமாகக் கொண்ட பிரம்மம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கினார்கள். பிரம்மம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கவேண்டிய அவசியம் ஏன் வந்தது? இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருந்த பூர்வீக இனக்குழுக்களிடமிருந்து தங்களுடைய தனித்துவத்தைப்பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியில் தங்களைப்புனிதமானவர்களாகக் காட்டிக் கொண்டார்கள்.
எண்ணற்ற இனக்குழுக்களில் கரைந்து இல்லாமல் போய்விடுவோமோ என்ற அச்சம் காரணமாக அகமணமுறையை முதன்முதலில் நடைமுறைப்படுத்தியவர்களாகவும் இருந்தனர். தன்னைப் புனிதமாக உருவகிக்கும்போது இயல்பாக மற்றவர்களை புனிதமற்றவர்களாக வரையறுத்தது. ஏகம், அத்வைதம் என்ற தத்துவநிலைபாட்டை நிலைநிறுத்தும்போது, மற்றவற்றை பன்மைத்துவமானது எனவே தாழ்ந்தவை என்றும் கூற முற்பட்டது. பூர்வீக இனக்குழுக்களுக்கும் தாந்திரீகம், சாருவாகம் ஆசீவகம், சமணம், பௌத்தம், போன்ற மதங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தன. இந்த மதங்களிலெல்லாம் பன்மைத்துவம் பேசப்பட்டது. ஏகத்தத்துவத்தை மறுத்தது. இவற்றுக்கு இடையில் வாதப்பிரதிவாதங்களும் நடந்thaது ஏகத்தத்துவம் வருண அமைப்பு முறையைக் கண்டுபிடித்தது. அதன் மூலம் தன்னுடைய பிரம்மம், நிரந்தரம், புனிதம், என்ற கோட்பாடுகளை மக்களிடம் நடைமுறைப்படுத்தியது.
பக்தி இயக்கத்தின் எழுச்சியில் மீண்டும் பன்மைத்துவம் மெலெழுந்து வந்தது. ஏராளமான கடவுளர்கள், ஏராளமான வழிபாட்டு முறைகள், வட்டார அடையாளங்கள், குறியீடுகள், பண்பாட்டு நடைமுறைகள், வளர்ந்தன. யாகச்சடங்குகளையும், பார்ப்பனீயத்தலைமையையும், வேதங்களின் ஆதிக்கத்தையும் எதிர்த்தன. ஏராளமான கடவுள்கள் சுயம்புவாகத் தோன்றினார்கள். இதைச் சூத்திர எழுச்சியாகப் புரிந்து கொண்ட பார்ப்பனீயம், இந்த எழுச்சியின் விளைவுகளை அங்கீகரிப்பது போல அங்கிகரித்து அப்படியே தன்னுடைய, ஏகத்தத்துவம், புனிதங்களுக்குள் ஸ்வாகா செய்து கொண்டது. முருக வழிபாடு, காளி வழிபாடு, போன்றவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
பிரம்மம் என்பதை தனிப்பெரும் தத்துவமாக கூறும் அறிவுஜீவிகள் பிரம்மத்தின் உள்ளீடு சாதியமைப்பு முறையை சூட்சுமக்கருத்துக்களாகச் சொல்வதை வசதியாக மறந்து அல்லது மறைத்து விடுகின்றனர். உலகின் மிக உயர்ந்த உண்மையான பிரம்மத்திற்கும் உலகிற்கும் தீட்டு நிலவுகிறது என்று வேதாந்தம் சொல்வது தத்துவமல்ல. கர்மக்கோட்பாடு, சத்வ,ரஜச,தமச, குணங்கள் பற்றிய கோட்பாடுகள், புருஷசூக்தத்தில் சொல்லப்படுகிற வருண அமைப்பு முறை, தீட்டுக்கொள்கை போன்றவை நேரடியாகவே வருணாசிரம-சாதிக்கோட்பாடுகளோடு தொடர்புடையவையல்லாமல் வேறென்ன?
பிரம்மம் தன்னில் தானே நிலை கொள்ளவேண்டும். பிறவற்றோடு கலக்கக்கூடாது, அப்படிக்கலந்தால் தீட்டாகி விடும், எனவே பிரம்மம் உறுதியாகத் தீண்டாமையைக் கடைப்பிடிக்க வேண்டும். தனது நிரந்தரத்தை, புனிதத்தை நிறுவுவதற்காக உலகம் மாயை, உடல் மாயை, உடலுழைப்பாளர்கள் மாயை, நிலம், இரும்பு, ரத்தம், பிறப்பு, இறப்பு, எல்லாம் மாயை என்றும் நிலத்தில், இரும்பில், ரத்தம் சம்பந்தமான வேலை செய்பவர்கள் ( மருத்துவர்) தோல் பதனிடுபவர்கள், பறை அடிப்பவர்கள், பௌதீகமாகச் சுத்தம் செய்யும் வேலை செய்பவர்கள், என்று பலவேறு உழைப்பாளிகளை அது தீட்டுக்குரியவர்கள் என்று சொல்கிறது. இவற்றில் எல்லாம் கலந்து விடாமல் இருப்பதே பிரம்மத்தின்புனிதம் என்கிறது. பிரம்மம் என்று வருகிற இடங்களில் எல்லாம் பார்ப்பனீயம் என்று வாசித்துப்பாருங்கள். முடைநாற்றம் எடுக்கும் வருணாசிரம- சாதிக்கோட்பாடுகளின் அழுகிய முகம் தெரிகிறதா?
அரசியல் அதிகாரம் என்று வரும்போது எந்த சமரசத்துக்கும் தயாராகும் பார்ப்பனீயம் வெகுமக்களின் கடவுள்களையும், அவர்களது வழிபாட்டுத்தலங்களையும், பண்பாட்டு அடையாளங்களையும் அவர்களது பன்மைத்தத்துவத்தையுமே கூட கபளீகரம் செய்து மீண்டும் ஏகத்தத்துவத்தை எல்லாவற்றிலும் ( வேதம்- வருணாசிரமம் – சமஸ்கிருதம் ஜனரஞ்சகமாக ஹிந்தி ) நிலை நாட்ட போரிட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த ஆன்மீக(?) உண்மைகளை மக்களிடம் அம்பலப்படுத்தினால் மட்டுமே மீண்டும் மீண்டும்  பார்ப்பனீயத்துக்கு மக்கள் இரையாகாமல் பாதுகாக்க முடியும்.
ஆதார நூல்கள் –
1.   இந்தியக்கதை-ஏகம் அநேகம் சாதியம் – ந.முத்துமோகன்
2.   இந்தியா உருவான விதம் – ஷிரீன் மூஸ்வி ( டிச 17- ஜன 18 மார்க்சிஸ்ட் )

நன்றி - வண்ணக்கதிர்





No comments:

Post a Comment