Wednesday 29 March 2017

அவரவர் இடமே சொர்க்கம்..

அவரவர் இடமே சொர்க்கம்..

உதயசங்கர்
புலியூருக்கு வெளியே ஒரு பெரிய புதர்க்காடு இருந்தது. கருவேலமரங்களும், உடைமரங்களும், விளாமரங்களும் வேப்ப மரங்களும் அங்கங்கே இருந்தன. ஆனால் பெரும்பாலும் மஞ்சணத்திச் செடிகள், ஆவாரம்பூச்செடிகள், எலுமிச்சை புற்கள், கோரைப்புற்கள், வேலிக்காத்தான் செடிகள், ஊமத்தை, ஓரிதழ் தாமரை, ஆடு தின்னாப்பாளை, முசுமுசுக்கைக்கொடி, காட்டு அவரைக்கொடி, தூதுவளைக்கொடி, என்று பலவகை காட்டுச் செடிகளும், கொடிகளும் நிறைந்திருந்தன. காட்டு எலிகள், வெருகுப்பூனை, முயல்கள், குள்ளநரிகள், சுருட்டைப்பாம்பு, கட்டுவிரியன், கொம்பேறிமூக்கன், சாரைப்பாம்பு, நல்லபாம்பு, போன்ற பாம்புகளும், பூரான், சேடான், தேள், ஆட்காட்டிக்குருவி, கரிச்சான் குருவி, தவிட்டுக்குருவி, சிட்டுக்குருவி, தேன்சிட்டு, பனங்காடை, மரங்கொத்தி, மயில், மைனா, என்று பறவைகளும், கடுகைக்காட்டிலும் சிறியதாகவும் உள்ளங்கையளவு பெரியதாகவும் உள்ள பூச்சிகள் அந்தக்காட்டில் வாழ்ந்தன.
காட்டுக்கு அருகிலேயே வெள்ளாமைக்காடுகளும் இருந்தன. நாலைந்து பம்பு செட்டு கிணறுகளும் இருந்தன. பகலில் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். இரவில் பம்புசெட்டு அறைக்கு வெளியில் விளக்கு எரியும். காட்டின் எல்லையில் இருந்த வேலிக்கருவைப்புதரில் ஒரு சுருட்டைப்பாம்பு முட்டைகள் இட்டு அடைகாத்தது. முட்டைகள் ஒவ்வொன்றாய் பொரிந்து குட்டிக்குட்டியாய் பாம்புகள் வந்தன. அவ்வளவு அழகாக இருந்தன. தோலின் வழவழப்பும் பளபளப்பும் அவற்றின் அழகை இன்னும் கூட்டின. அம்மாசுருட்டைப்பாம்புக்குப் பெருமையாக இருந்தது. அதன் ஏழு முட்டைகளும் பொரிந்து குஞ்சுகள் வந்துவிட்டன. போனதடவை பத்து முட்டைகளில் ஐந்து முட்டைகளை சாரைப்பாம்புஅண்ணன் தின்று விட்டான். ஐந்து குஞ்சுகள் வெளிவந்த சிறிது நேரத்தில் எங்கிருந்தோ வந்த மயில் ஒன்றைக் கொத்திக் கொண்டு போய் விட்டது. அதனால் இந்தமுறை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அம்மாசுருட்டைபாம்பு நினைத்தது.
முட்டையிலிருந்து வெளிவந்த குட்டிசுருட்டைப்பாம்புகள் துருதுருவென்று அங்கிட்டும் இங்கிட்டும் அலைந்தன. அவற்றிற்குப் பசி எடுக்க ஆரம்பித்து விட்டது. அம்மாசுருட்டைப்பாம்பு லேசாக விசிலடித்த மாதிரி குரல் கொடுத்தது. உடனே எல்லாக்குட்டிசுருட்டைபாம்புகளும் அம்மாவின் பக்கத்தில் வந்தன. அம்மாசுருட்டைப்பாம்பு பேசியது.
” எல்லோரும் கவனமாகக் கேட்டுக்கொள்ளுங்கள். இந்தப் பெரிய காடு தான் நம்முடைய வீடு. இந்தக்காட்டுக்குள் உங்களுக்குத்தேவையான எல்லாம் கிடைக்கும். பூச்சிகள், முட்டைகள், ஏராளமாகக் கிடைக்கும். நமக்கு எதிரிகளும் உண்டு. அவர்களிடமிருந்து எப்படித் தப்பிக்கிறதுன்னு நான் சொல்லித்தாரேன். நமக்கு விஷம் கிடையாது. ஆனால் பூச்சிகளைக் கடிக்கலாம். ஒரே ஒரு எச்சரிக்கை. இந்தக்காட்டின் எல்லையைத் தாண்டக்கூடாது. சரியா? “
என்று சொன்னது. தலையை ஆட்டி ஆட்டி குட்டிசுருட்டைப்பாம்புகள் கேட்டுக் கொண்டிருந்தன. அதில் இருந்த ஒரு வாலு அம்மாவிடம்,
“ ஏன் காட்டை விட்டுப்போனா என்ன ஆகும்? “ என்று கேட்டது. அம்மாசுருட்டைப்பாம்பு அதைப்பார்த்து,
“ நாம் எல்லோரும் இயற்கையன்னையின் குழந்தைகள். இயற்கை தன்னுடைய குழந்தைகளுக்கு சில விதிமுறைகளைச் சொல்லி வைத்திருக்கிறாள்….”
என்று சொன்னது. உடனே மற்ற குட்டிசுருட்டைப்பாம்புகளும் சேர்ந்து கொண்டன.
“ யெம்மா..யெம்மா… அந்த விதிமுறைகளைச் சொல்லும்மா… சொல்லும்மா..”
என்று கொஞ்சின. அம்மாசுருட்டைப்பாம்பு எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு,
“ ஒண்ணு பசிக்கும்போது மட்டும்தான் இரையைக் கொல்லவேண்டும்.ரெண்டாவது காட்டில் யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் கிடையாது. எல்லோருக்கும் சமமான உரிமை உண்டு. மூணாவது புலியோ எலியோ பாம்போ பூரானோ ஈசலோ சிலந்தியோ எல்லோருக்கும் ஒரு இடம் உண்டு. இதுதான் இயற்கையன்னையின் விதிகள்.. என்ன புரிஞ்சிதா! “
என்று அம்மாசுருட்டைப்பாம்பு கேட்டது. எல்லோரும் தலையாட்டினார்கள். ஆனால் கேள்வி கேட்ட வாலு மட்டும் தலையாட்டவில்லை. அதற்கு அம்மா சொன்னதில் நம்பிக்கையில்லை. திருட்டு முழி முழித்துக்கொண்டு முன்னும்பின்னும் அலைந்து கொண்டிருந்தது.
இரவு வந்தது. அம்மாசுருட்டைப்பாம்பு குட்டிகளைக்கூட்டிக் கொண்டு எப்படி பூச்சிகளைப்பிடிப்பது என்று கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தது. காட்டின் எல்லையை ஒட்டி வெளிச்சம் தெரிந்தது. வாலு மட்டும் வெளிச்சத்தைத் திரும்பிப் பார்த்தது. ஏ யப்பா…என்ன வெளிச்சம்! அந்த வெளிச்சத்தில் எத்தனை எத்தனை பூச்சிகள்! கொய்கொய்ன்னு பறந்து கொண்டிருந்தன. இங்கே இருட்டுக்குள் அலையறதை விட அங்கே போனால் வாயைத் திறந்து வைத்தால் கொத்துக்கொத்தாய் பூச்சிகள் வந்து விழுமே என்று நினைத்தது. அப்படியே கூட்டத்திலிருந்து ஜகா வாங்கி அந்த வெளிச்சத்தை நோக்கி வேகவேகமாக ஊர்ந்து சென்றது.
வெளிச்சம் ஒரு பம்பு செட்டு மோட்டார் அறையின் தலைமீதிருந்த விளக்கில் இருந்து வந்து கொண்டிருந்தது. மெல்ல வெளிச்சத்தில் ஊர்ந்து சென்ற வாலுசுருட்டைப்பாம்புக்குட்டிக்கு முன்னால் ஏராளமான பூச்சிகள் விழுந்து கிடந்தன. அவசர அவசரமாய் அந்தப்பூச்சிகளை விழுங்கியது. வயிறு நிறைந்து விட்டது. ஆனாலும் விடவில்லை. மேலும் மேலும் என்று தின்று கொண்டேயிருந்தது. நாளைக்கு அம்மாவையும் சகோதர, சகோதரிகளையும் கூட்டிக்கொண்டு வரவேண்டும் என்று நினைத்தது. அதனால் அசையக்கூட முடியவில்லை. அப்போது மோட்டார் அறையிலிருந்து வெளியே ஒரு ஆள் வந்தான். அவன் காலடிச்சத்தத்தை உணர்ந்தது வாலு. ஆனால் வேகமாக ஓட முடியவில்லை. அதற்குள் அந்த ஆள் பாம்பு..பாம்பு.. என்று கத்திக்கொண்டே அங்கிட்டும் இங்கிட்டும் ஓடி ஒரு பெரிய கம்பை எடுத்து அந்தக்குட்டிப்பாம்பை அடிக்க வந்தான். அவன் போட்ட சத்தம் கேட்டு இன்னொருத்தன் ஓடிவந்து குட்டிசுருட்டைப்பாம்பைப் பார்த்து “ டேய் நல்லபாம்பு…நல்லபாம்பு.. “ என்றான். குட்டிக்கு எப்படியாவது தப்பிக்கவேண்டும் என்று பதறியது. உடனே தலையைத்தூக்கி சீறியது. அவ்வளவு தான். இரண்டுபேரும் கொஞ்சதூரம் தள்ளிப்போய் நின்றார்கள். அவர்களில் ஒருத்தன்,
“ படம் எடுக்குது பாருடா….”
“ நல்லபாம்பு மாதிரி தெரியலடா.. சாதாரணப்பாம்பு மாதிரி தான் தெரியுது..”
“ எந்தப்பாம்பா இருந்தாலும் சரி கண்ணுல பட்டிருச்சில்ல.. அடிச்சிக்கொன்னிரணும்..” என்று மற்றவன் சொன்னான். இரண்டு பேரும் அடிப்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.
குட்டிசுருட்டை மெல்ல மெல்ல ஊர்ந்து இருட்டைப் பார்த்துப் போய்க்கொண்டிருந்தது. பார்க்கும்போது காடு வெகுதூரத்திலிருந்தது. போய்ச் சேரமுடியுமா? குட்டிசுருட்டைக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது. இயற்கையன்னையின் விதிகள் ஞாபகம் வந்தன. சரி.. அவ்வளவு தான் நம்மகதை என்று நினைத்தது வாலு.
கம்பை வைத்திருந்தவன் குட்டிசுருட்டைக்கு மேலே கம்பை உயர்த்தினான். நடப்பதை எல்லாம் காட்டின் தேவதை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு குட்டிசுருட்டையின் மீது இரக்கம் தோன்றியது. உடனே அவள் வாயினால் காற்றை ஊதினாள். விர்ரென்று காற்று அங்கே வீசியது. மின்சாரக்கம்பிகள் காற்றில் அலைமோதின. தீப்பொறிகள் கிளம்பின. திடீரென அந்த இடமே இருள் மயமாகி விட்டது. இருளைப் பார்த்ததும் அந்த மனிதர்கள் பயந்து போனார்கள். குட்டிசுருட்டை வேகம் வேகமாக உடலை இழுத்துக்கொண்டு காட்டின் எல்லையைக் கடந்து காட்டினுள்ளே நுழைந்தது.
அம்மாசுருட்டைப்பாம்பு மற்ற குட்டிகளோடு வாலுவைத் தேடிக்கொண்டு எதிரே வந்தது. வாலுவைப் பார்த்ததும் கோபத்துடன்,
“ எங்கே போயிருந்தே இவ்வளவு நேரம்..? “ என்று கேட்டது. அதற்கு அந்த வாலு என்ன சொன்னது தெரியுமா?
“ அம்மா இனி நான் வெளிச்சத்துக்குப்போகமாட்டேம்மா..”

காட்டின் தேவதை கலகலவெனச் சிரித்தாள்.
நன்றி- தமிழ் இந்து மாயாபஜார்

No comments:

Post a Comment