Wednesday 19 October 2016

அய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்

அய்யாச்சாமி தாத்தாவும்
ஆட்டுக்கல் மீசையும்
மதிப்புரை
தமிழில் சிறுவர் பாடல்கள் வெளிவந்த அளவிற்கு சிறுவர் கதைகள் வெளிவரவில்லை. அப்படி வெளிவந்த ஒரு சில சிறுவர் கதை நூல்களும் ஆசிரியர்களின் மேதாவிலாசத்தைக் காட்டுவதாக இருக்கிறதே தவிர, சிறுவர்களின் மனதை பற்றிப் படரும் வகையைச் சார்ந்ததாக இல்லை.
சிறுவர்களுக்காக எழுதுகிறவர்கள் சிறுவர்களை அறிந்திருந்தால் மட்டும் போதாது; சிறுவர்களோடு இணைந்து சிந்திக்கும் மனப்பக்குவம் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். அந்த வகையில் இந்த நூல் சிறுவர்களைத் தனதாக்கிக் கொள்ளும் சிறப்புக்குரியதாகும்.
மலையாள எழுத்துலகில் சிறுவர்களுக்காக எழுதிக் குவித்த மாலி இந்த நூலை மலையாளத்தில் எழுத, மூலத்தின் ரசனை குறையாமல் அழகு தமிழில் பிரபல எழுத்தாளர் உதயசங்கர் தமிழாக்கம் செய்திருக்கிறார்.
‘அய்யாச்சாமி தாத்தாவின் பலாமரம்’, ‘ஆட்டுக்கல் மீசை’, ‘சங்கரநாராயணனும் கிங்கர யானையும்’, ‘பல்லின் வேலை நிறுத்தம்’, ‘தாமரைப் பூவும் வண்டும்’, ‘சொர்க்கமும் நகரமும்’, ‘கொண்டையில்லாத சேவல்’, ‘அடி வாங்கினவனுக்குத்தான் வலி தெரியும்!’, ‘திருடன் கொண்டுபோன நாய்க்குட்டி’, ‘ரேடியோ பல்லி’, ‘பறவைகளுக்கு எப்படி சிறகுகள் கிடைத்தன?’, ‘மந்திரமும் தந்திரமும்’, ‘கயிறு இழுக்கும் போட்டி’, ‘பழிக்குப் பழி’, ‘வௌவாலுக்கு நன்றி’, ‘நெருப்போடு விளையாடினால்?’, ‘ஓநாயை ஏமாற்றிய முயல்’, ‘கடல் பிரயாணத்தில் அதிசயங்கள்’ என மொத்தம் 18 கதைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன.
ஒவ்வொரு கதையும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் அமைந்திருப்பதும், குழந்தைகள் படித்துப் படித்துச் சிரித்து மகிழும் வகையிலிருப்பதும் இந்த நூலின் தனித்துவமாகும்.
இந்த நூலின் முதல் கதையான ‘அய்யச்சாமி தாத்தாவின் பலாமரம்’ என்ற கதையில் அய்யாச்சாமி தாத்தாவின் தலைமுடியும் தாடியும் வைக்கோல் நிறத்தில் அடர்த்தியாக வளர்ந்திருக்கிறது. அவருக்கு பலாப்பழம் என்றால் கொள்ளை ஆசை. ஒருமுறை அய்யாச்சாமி தாத்தா கொட்டையுடன் பலாச் சுளையைச் சாப்பிட்டு விடுகிறார். அவருடைய வயிற்றில் அந்தக் கொட்டை செடியாக வளர்ந்து அவருடைய காது வழியாக கிளை பரப்பி மரமாக வளர்ந்து விடுகிறது. இதற்கு மேலும் இந்தக் கதையைப் படிக்கும் சிடு மூஞ்சிகள் கூட சிரிக்காமல் இருக்க முடியாது.
என்னுடைய பேத்தி யூ.கே.ஜி. படிக்கிறாள். சனியும் ஞாயிறும் மதிய வேளையில் அவளுக்கு நான் கதை சொல்ல வேண்டும். இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு அவளுக்கு அய்யாச்சாமி தாத்தா காதில் பலாமரம் வளர்ந்த கதையை நான் சொன்ன போது என் பேத்தி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது இந்த நூலுக்குக் கிடைத்த வெற்றியாகும்.
சில மேதாவிகள் இப்படியெல்லாம் கற்பனை செய்து குழந்தைகளுக்கு எதார்த்தத்தைப் புரியவிடாமல் செய்யலாமா? என்பர். வயதுக்கு வந்தவர்களே சிரிப்பைத் தொலைத்துவிட்டு வாழுகின்ற காலமிது! அதனால் முதலில் குழந்தைகளைச் சிரிக்க வைப்போம்; அதன்பின் குழந்தைகளே சிந்திக்கத் தொடங்கி விடுவர்.
மனிதன் தெய்வங்களைப் படைத்தபோது பிள்ளையாருக்கு எலியை வாகனமாகவும், முருகனுக்கு மயிலை வாகனமாகவும் வைத்தானே எதற்கு? எலி பிள்ளையாரைச் சுமக்குமா? மயில் முருகனைத் தாங்குமா? என்று எந்த பக்திமானும் நினைப்பதில்லை. பக்திமான்களின் நெஞ்சங்களில் தெய்வங்களைப் பதியவைப்பதற்கு இந்தக் கற்பனை இன்றும் கைகொடுத்துக் கொண்டிருக்கிறது. அதே போன்று சிறுவர்கள் மனதில் கதைகளைப் பதிவு செய்ய இந்த நூலாசிரியர் கைக்கொண்டிருக்கும் யுக்தி சிறப்பானதாகும்.
சிறுவர்கள் மட்டுமல்ல; பெரியவர்களும் இந்தக் கதைகளைப் படிப்பதன் வழியாக தாங்கள் மறந்துபோன சிரிப்பை மறுபடியும் கற்றுக்கொள்ளலாம். இதுபோன்ற நூல்கள் தொடர்ந்து வெளிவர வேண்டும்; அதன் வழியாக சிறுவர்களின் முகங்களில் சிரிப்பைக் காணலாம்.
- பாரதி லெனின்
நன்றி-மேன்மை
அக்-16

No comments:

Post a Comment