Tuesday 7 April 2015

நீங்கள் இல்லையென்றால் பின் வேறு யார்? இப்போது இல்லையென்றால் பின் எப்போது?

 

வி.என்.முரளி

( கேரள புரோகமன கலா சாகித்ய சங்கட்னா )

 

தமிழில்-உதயசங்கர்revolution 3

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 13 வது மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்கு எனக்கு வாய்ப்பளித்தமைக்கு எங்களுடைய கேரள புரோகமன கலா சாகித்ய சங்கட்னாவின் சார்பில் என் மகிழ்ச்சியையும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பல தலைவர்கள் கேரளாவில் புரோகமன கலா சாகித்ய சங்கட்னாவின் பல கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் வந்து கலந்து கொண்டு பேசியிருக்கிறார்கள். அது எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் தந்தது. அதற்காகவும் இந்தத் தருணத்தில் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வர்க்கவிரோதிகளுக்கும், மதவெறிச்சக்திகளுக்கும், மூடநம்பிக்கைகளுக்கும் எதிராக மாநில அளவிலான ஒரு பிரச்சாரப்பயணத்திற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மார்ச் மாதம் 27 ஆம் தேதி காசர்கோட்டில் துவங்கி கேரளாவின் 16 மாவட்டங்களின் வழியாக வந்து தமிழ்நாட்டின் எல்லையான பாறசாலையில் நிறைவு அடைகிறது. திராவிட மொழிகளில் தமிழும் மலையாளமும் மிகுந்த நெருக்கமும் தொடர்பும் கொண்டது. மொழிரீதியாக மட்டுமல்லாமல் இலக்கிய ரீதியாகவும் மிகுந்த நெருக்கமும் கொடுக்கல் வாங்கலும் தமிழுக்கும் மலையாளத்துக்குமிடையில் இருக்கிறது. இரண்டு மொழிகளுக்குமிடையிலான உறவு இரண்டாயிரம் வருடங்கள் பழமையானது. சங்க இலக்கியத்தின் பெரும்பகுதியில் கேரளாவின் வாழ்க்கை எழுதப்பட்டிருப்பதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். அது மட்டுமில்லை. சிலப்பதிகாரத்திலும் சேரநாட்டு வாழ்க்கை விவரிக்கப்பட்டுள்ளது. சுந்தரம்பிள்ளையின் மனோன்மணியமும் கேரளவாழ்க்கையோடு தொடர்புடையது.

நவீன இலக்கியத்திலும் தமிழ் எழுத்தாளர்களான நகுலன், நீல பத்மநாபன், மாதவன் போன்றோர் தமிழுக்கும் மலையாளத்துக்கும் இடையிலுள்ள உறவை வலுப்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல கேரளாவிலுள்ள தமிழ்ச்சங்கங்கள் கேரளாவில் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்டுக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக திருவனந்தபுரத்திலுள்ள தமிழ் எழுத்தாளர் சங்கத்தோடு புரோகமன கலா சாகித்ய சங்கத்திற்கு நல்ல உறவும் நட்பும் உண்டு. ஆனால் இரண்டு மொழிகளுக்குமிடையிலான இலக்கியப்பரிவர்த்தனை மிகவும் குறைவு என்று நான் நினைக்கிறேன். அத்தகைய பரிவர்த்தனைக்கு நம்முடைய இரண்டு சங்கங்களுக்கிடையில் ஒரு ஒருங்கிணைப்பு தேவை. அப்படி ஒரு ஒருங்கிணைப்புக்குழு ஒன்றை இந்த மாநாட்டில் நீங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று நான் கோரிக்கை வைக்கிறேன். அதன் மூலம் முற்போக்கு இலக்கியத்தை இன்னும் வளர்க்க முடியும்.

பெரிதும் சவால்கள் நிறைந்த காலம் இது. இதில் தமிழ்நாடு என்றோ கேரளா என்றோ வேறுபாடில்லை. மக்களை சாதிமதக்கூறுகளாகப் பிரிக்கிற வேலை இப்போது அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாசிசத்திற்கு எதிராகப் போராடுவதற்கென்றே 1930-களில் அகில உலக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மாக்சிம் கார்க்கியின் தலைமையில் துவங்கப்பட்டது. அப்போது மனித குலத்தின் பாதுகாவலன் யார்? என்ற கேள்வியே முன்னுக்கு வந்தது.

இப்போது இந்தியாவில் அதே பாசிசத்திற்கு நிகரான சூழல் நிலவுகிறது. சங்பரிவாரங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைமையில் ஆட்சியைப் பிடித்தபிறகு மதவாதம், இனவாதம், தேசிய வாதம் போன்ற வெறிகளை இந்திய மக்கள் ஏற்றுக் கொள்கிற சூழ்நிலைமை உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. சாதிமதத்துவேஷங்களை இந்தியாவில் சட்டமாக்குகிற முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பகுத்தறிவையும், விமரிசன உணர்வையும் கொண்ட ஜனநாயகத்தைத் தகர்க்கிற வேலையை சங்பரிவாரங்கள் செய்து கொண்டிருக்கின்றன. பாசிசத்தை எதிர்க்காமல் இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவரான மோகன் பகவத் இந்தியாவில் ஐந்து M-களை தங்களுடைய எதிரிகளாகச் சொல்கிறார். MARXISM, MUSLIM, MISSIONARIES, MACALEY EDUCATION, MATERIALISM இந்த ஐந்து M-களை இந்தியாவிலிருந்து முற்றிலும் துடைத்தெறிய வேண்டும். அதைத் தான் அவர்கள் சுச் பாரத் அதாவது தூய்மை இந்தியா என்று சொல்கிறார்கள். வரலாற்றில் இதற்கும் கூட ஒரு ஒப்புமை இருக்கிறது. ஜெர்மனியின் ஹிட்லர் கம்யூனிஸ்டுகளையும், யூதர்களையும் அழித்து ஒழிப்பதற்கு ஒரு திட்டம் கொண்டு வந்தான். அதற்கு அவன் இறுதித்தீர்வு ( FINAL SOLUTION ) என்று பெயரிட்டிருந்தான்.

இந்தியாவில் மோடி அரசாங்கத்தைப் பின்னாலிருந்து இயக்கிக் கொண்டிருப்பது கார்ப்பரேட்டுகள் தான். இந்தியாவில் இப்போது உருவாகியுள்ள பாசிச முன்னணியில், கார்ப்பரேட்டுகள், ஊடகங்கள், ஏகாதிபத்தியம், மற்றும் சாமியார்கள் இருக்கிறார்கள். பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்த பிறகு நடந்து கொண்டிருக்கிற காரியங்களை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. கடந்த விஜய தசமி நாளில் இந்திய வரலாற்றில் இது வரை நடந்திராத வகையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தலைவரான மோகன்பகவத் அரசுத்தொலைக்காட்சியில் ஒரு மணிநேரம் உரையாற்றினார். ஆனால் அதற்குப்பின்னால் வந்த பக்ரீத்திலோ, கிறிஸ்மஸ் தினத்திலோ எந்த உரையும் யாரும் நிகழ்த்தவில்லை. இந்தியாவின் பன்மைத்துவத்துக்கு ஆர்.எஸ்.எஸ். மிகப்பெரிய எதிரி.

சங் பரிவாரங்கள் ஊடகங்களின் வழியே மறைமுகமான சூட்சும அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தேசியவாதத்தையும் கலாச்சார அரசியலையும் அவர்கள் முகமூடிகளாக அணிந்து கொண்டிருக்கிறார்கள். ஆம் நண்பர்களே! மகாத்மா காந்தி சுடப்பட்ட நாளை கோட்சே வீரச்செயல் புரிந்த நாளாக பிரச்சாரம் செய்கிறார்கள்.. கோட்சே காந்தியைச் சுட்டது சரிதான் என்றும் சொல்கிறார்கள். அதுமட்டுமில்லை. காந்தியைக் கொலை செய்த கோட்சேவுக்கு கோவில் கட்டவும் சிலை வைக்கவும் முயற்சி செய்கிறார்கள்.

இந்தியாவில் பாசிசம் வளர சூட்சும அரசியல் தளங்களையும் பயன்படுத்துகிறது. கல்வித்திட்டத்தை மாற்றியமைக்கிறார்கள். வரலாற்றை திருத்துகிறார்கள். அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருகிறார்கள். I.C.R.H. –ல் நடந்ததை நாம் அறிவோம். கேரளாவில் நேஷனல் புக் டிரஸ்டின் தலைவராக இருந்த எழுத்தாளர் சேதுவை மாற்றி ஒரு ஆர்.எஸ்.எஸ். காரரை அந்தப் பதவியில் உட்காரவைத்திருக்கிறார்கள்.

சங் பரிவாரம் இப்போது நடத்திக் கொண்டிருக்கிற நிகழ்ச்சி நிரலான கர்வாபசி ( தாய் வீடு திரும்புதல் ) என்பது ஒரு சொல் அல்ல. ஒரு இயக்கம் அல்ல. அது ஒரு கொலைக்கருவி. இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிராக நீட்டப்படுகிற துப்பாக்கி. ஏனெனில் இந்தியாவில் நாலாயிரத்துக்கும் மேல் மாறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்ட இனங்கள் உண்டு. முந்நூற்றிருபத்தியைந்து மொழிகள் இருக்கின்றன. ஏராளமான மதங்களும் அதில் உட்பிரிவுகளும் உண்டு. மத மறுப்பாளர்களும், கடவுள் மறுப்பாளர்களும் உண்டு. இந்த மாறுபட்ட அனைத்து மக்களையும் ஒற்றைக் கலாச்சார அடையாளமாக, இந்துக்களாக மாற்ற வேண்டும் பி.ஜே.பி. துடிக்கிறது. அதன் மூலம் ஒரு மகத்தான பன்முக சமூகத்தை முடிவுக்குக் கொண்டு வர நினைக்கிறது.

கர்வாபசி என்றால் தாய்வீடு திரும்புதல் என்று சொல்ல முடியாது. மாற்று மதத்தவர்களை, மாற்றுக் கருத்துடையவர்களை நாட்டை விட்டு விரட்டியடித்தல் ஆகும். ஒரு ஜனநாயக நாட்டில் எந்த மதத்தைப் பின்பற்றவும், மதமே வேண்டாம் என்று சொல்வதற்கும் உரிமை இருக்கிறது. என்றென்றும் அந்த உரிமை நிலைத்திருக்க வேண்டும். ஏனெனில் இந்திய ஒற்றுமையில் தீ வைக்கிற முயற்சி தான் கர்வாபசி. இந்தியாவில் வீடற்ற எண்ணற்ற மக்களுக்கு சொந்தமாக வீடு வழங்க முடியாத அரசு கர்வாபசி என்பது கேலிக்குரியது. அப்படி கர்வாபசி மூலம் திரும்பி வருபவர்களுக்கு எந்த வீட்டைக் கொடுப்பார்கள்? நம்பூதிரியின் வீட்டையா? நாயரின் வீட்டையா? இல்லையென்றால் பிராமண வீட்டையா? சத்திரிய வீட்டையா? அல்லது சூத்திரர் வீட்டையா?

2000 ஆண்டுகளுக்கு முன்பே யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கணியன் பூங்குன்றனின் வார்த்தைகளைத் தமிழிலிருந்தே கேட்டோம். இத்தகைய ஒரு நாட்டில் மக்களைப் பிரித்தாளுகிற சூழ்ச்சி நடக்கிறது. இந்தச்சூழலில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பங்களிப்பு முன்னுக்கு வருகிறது. வரலாற்றில் கலை இலக்கியத்துறையில் இன்னொரு விடுதலைப்போர். முற்போக்கு கலை இலக்கியம் பாரம்பரியமான முற்போக்கு அழகியலை மேலும் பொலிவாக்குகிறது. எல்லாவித பிற்போக்குத்தனங்களையும் எதிர்க்கிறது. பழமையின் பிற்போக்கு மரபுகளை எதிர்கொண்டு புதிய முற்போக்கான மக்கள் மரபுகளை உருவாக்குகிறது.

இந்த செஞ்சுடர் பாரம்பரியத்தை நாம் உயர்த்திப்பிடிக்க வேண்டும். இன்று தமிழில் எழுத்தாளர்களின் கைகளுக்கும் சிந்தனைகளுக்கும் விலங்கிடும் வேலை நடக்கிறது. இதை நாம் அநுமதிக்க முடியாது. இந்தத்தருணத்தில் சொந்த மண்ணிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட பெருமாள் முருகனுக்கு ஆதரவாக கேரளா முழுவதும் ஆதரவும் ஒற்றுமைக்குரலும் ஓங்கி ஒலித்தது என்பதை சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.பெரியாரின் மண்ணில் இத்தகைய பிற்போக்கான செயல்களுக்கு இடமளிக்கக் கூடாது.

இந்தத் தருணத்தில் அமைதி காப்பதும் கூடாது. இப்போது இல்லையென்றால் பின் எப்போது நாம் களத்தில் இறங்கப் போகிறோம்? இப்போது செய்யாமல் பின் வேறு எப்போது செய்யப்போகிறோம்?

IF NOT YOU WHO? IF NOT NOW WHEN?

எந்த சவாலையும் எதிர்கொள்வதற்கான ஒரு ஐக்கிய முன்னணியை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். காலத்தின், வரலாற்றின் குரலுக்கு நாம் செவி கொடுப்போம். உங்களோடு தோளோடு தோளாய் நாங்களும் நிற்கிறோம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் இந்த மாநாடு வெற்றி பெற புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

( தமுஎகச 13 வது மாநில மாநாட்டில் ஆற்றிய உரையின் சுருக்கம் )

நன்றி-செம்மலர் ஏப்ரல் 2015

No comments:

Post a Comment