ஆனால் இது அவனைப்பற்றி – குறுநாவல் தொகுப்பு
உதயசங்கர்
வெளியீடு- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சென்னை-600098
விலை-ரூ.100
ஒரு சிறிய காற்றில் ஒடிந்து விழுந்து விடக்கூடிய சல்லி வேர்களில் பிடிமானம் கொண்டு நிற்கும் வாழ்க்கை விதிக்கப்பட்ட ஒரு கரிசல்க்காட்டு நகரத்தின் கீழ் மத்தியதர வர்க்கத்து வாழ்க்கையை அந்த வாழ்க்கைக்கே உரிய முறையில் சொன்ன முதல் கலைஞன் உதயசங்கர். அம்மக்களின் குரலாகத் தொடர்ந்து எழுதி வரும் உதயசங்கரின் மூன்று குறுநாவல்கள் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவ்வாழ்க்கை கனவுகளும், ஏக்கப்பெருமூச்சுகளும் நிறைந்ததாக வாசக மனதைத் துயரத்தால் நிரப்புவதாக நம் முன் விரிந்து செல்கிறது. வேலையில்லாக் காலத்து இளைஞனின் வலியை இவ்வளவு உக்கிரத்துடன் சொன்ன கதைகள் தமிழில் மிகக்குறைவு.
ச.தமிழ்ச்செல்வன்
லட்சத்தீவின் நாடோடிக்கதைகள்
மலையாளத்தில்- முனைவர் எம். முல்லக்கோயா
தமிழில்- உதயசங்கர்
வெளியீடு- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சென்னை-600098
விலை-ரூ.65
எல்லாக்கதைகளும் மரணத்திலிருந்து ஒரு வகையான தப்பித்தல் தான். வாழ்விற்கும், மரணத்திற்கும் இடையில் ஊஞ்சலாடுகிற நிர்ப்பந்தத்திலுள்ள மனிதனுடைய மகாபிரயத்தனங்களும், துன்பதுயரங்களும், மரணத்திலிருந்து தப்பிப்பதற்கான இயற்கையுணர்வும் விதிச் சக்கரத்தின் சுழற்சியும் எல்லாம் இந்தக் கதைகளில் தன்னுடைய புதிர் வழிகளை விரிக்கின்றது. யதார்த்ததிற்கும் உணமைக்குமிடையில் எங்கேயோ உருமாறுகிற இந்தக் கதைகள் சத்தியாசத்தியங்களையும், தர்மாதர்மங்களையும், புரிந்து கொள்வதற்கான மானசீகச் சூத்திரங்களாகவும் சமூகவாழ்வின் சந்தோஷங்களாகவும், தீவுக்காரர்களுக்கு அநுபவப்படுகின்றன. அவை நம்மை தீமைகளைப் புரிந்து கொள்வதற்கான படிப்பினைகள், குறிமொழிகள்.
ஆயிரத்தொரு இரவுகளிலோ, மகாபாரதத்திலோ,உள்ள கதைகளுக்கு நிகரான கருத்துகளும், வேகமும் இந்தக் கதைகளில் இருக்கின்றன. அரபிக்கதைகளை வாசிக்கின்ற சுவாரசியத்தோடேயே இந்தக் கதைகளை வாசிக்கலாம்.