Tuesday 27 November 2012

திருடன் கொண்டு போன நாய்க்குட்டி

மலையாளம்- மாலிMohan Das (3)

தமிழில்-உதயசங்கர்

ராமுவுக்கு ஒரு நாய்க்குட்டி கிடைத்தது.நாய்க்குட்டியின் தலையும் வாலும் கருப்பு. உடம்பும் கால்களும் வெள்ளை. அழகான நாய்க்குட்டி. அதே சமயம், உஷாரான நாய்க்குட்டி.

நாய்க்குட்டி இரவில் வராந்தாவில் படுத்து உறங்கும். ராமுவின் அறைக்கு வெளியே தான் வராந்தா இருந்தது. ராமு அறைக்கதவைத் திறந்தே வைத்திருப்பான்.

ஞாயிற்றுக்கிழமை இரவு பனிரெண்டு ஆனது. ஒரு மணிச்சத்தம் கேட்டது. அதைக் கேட்டு ராமு விழித்து விட்டான். நாய்க் குட்டியும் விழித்து விட்டது. மணிச்சத்தம் அருகில் வந்து கொண்டேயிருந்தது. பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் தூரத்தில் கேட்காமலே போய் விட்டது.

” நாய்க்குட்டியே! இந்த மணிச்சத்தம் எதுக்குன்னு தெரியுமா?” என்று ராமு கேட்டான்.

நாய்க்குட்டி வாலாட்டியது- தெரியாது என்ற அர்த்தத்தில்.

“எல்லா ஞாயிற்றுக்கிழமையும் ராத்திரி பனிரெண்டு மணி ஆயிருச்சின்னா ஒரு திருடன் ரோட்டு வழியே நடந்துபோவான். திருடி விட்டு மணியடித்துக் கொண்டே வீட்டுக்குப் போவான். திருடன் போகிறான் என்று எல்லோருக்கும் தெரியணுமாம்..அதுக்குத் தான் மணியடித்துக் கொண்டு போகிறான்..என்ன உனக்குப் பயமாருக்கா நாய்க்குட்டி?” என்று ராமு கேட்டான்.

நாய்க்குட்டி வாலாட்டியது- பயம் இல்லை என்ற அர்த்தத்தில்.

அடுத்த ஞாயிறு வந்தது.இரவு மணி பதினொன்றரை ஆகி விட்டது. நாய்க்குட்டி என்ன செய்தது தெரியுமா? சத்தம் போடாமல் எழுந்து கேட்டிற்கு அடியில் நுழைந்து ரோட்டில் போய் உட்கார்ந்து கொண்டது. அவனுக்கு திருடன் எப்படி இருப்பான்னு கொஞ்சம் பார்க்கணும்!

மணி பனிரெண்டு அடித்தது. அதோ வருகிறான் திருடன் மணியை அடித்துக் கொண்டு. திருடனைப் பார்த்தபோது நாய்க்குட்டி பயத்தில் நடுங்கியது. அரிவாள்மீசை, முட்டைக்கண்கள்,கருப்பு நிறம்,பயங்கரமான ஆள்!

நாய்க்குட்டிக்கு வீட்டிற்குப் போனால் போதும் என்று தோன்றியது. அவன் கேட்டின் அடியில் நுழைய முயற்சித்தான். திருடன் பாய்ந்து ஒரே பிடி. உடனே நூலை வைத்து வாயில் ஒரு கட்டு. நாய்க்குட்டிக்குக் கடிக்கவும் முடியாது, குரைக்கவும் முடியாது. திருடன் நாய்க்குட்டியைக் கையில் எடுத்தான்.மணியை அடித்துக் கொண்டு ஒரே நடை.

முதலில் நாய்க்குட்டி மிகவும் பயந்து போய்விட்டது. பின்பு பயம் இல்லாமல் போய் விட்டது. அவன் யோசித்தான். வாயை மட்டும் தானே கட்டியிருக்கிறார்கள். மூக்கை கட்டவில்லை. கண்ணைக் கட்டவில்லை. அவன் மூக்கைத் திறந்து வைத்தான்.கண்ணைத் திறந்து வைத்தான்.எல்லாமணங்களயும் முகர்ந்து உள்வாங்கினான்.எல்லாகாட்சிகளையும் பார்த்தான். எல்லா மணங்களையும், எல்லாக்காட்சிகளையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டான்.

பத்து மைல் தூரத்திலிருந்தது திருடனின் வீடு. திருடன் வீட்டிற்கு போய்ச் சேர்ந்தான். திருடனின் மனைவி திருடி கதவைத் திறந்தாள். திருடன் நாய்க்குட்டியோடு வீட்டிற்குள் சென்றான். திருடி பத்திரமாய் கதவை அடைத்தாள்.

“திருடி இந்த நாய்க்குட்டி நல்லாருக்கா?” என்று திருடன் கேட்டான்.

“திருடா ரொம்ப நல்லாருக்கு..” என்று திருடி சொன்னாள்.

திருடி நாய்க்குட்டியை சங்கிலியால் கட்டிப் போட்டாள். சோறும் பாலும் கொடுத்தாள். பின்பு படுத்து உறங்கினாள்.

நாலைந்து நாள் கழிந்த பிறகு என்ன நடந்தது தெரியுமா? திருடி யோசித்தாள். எவ்வளவு நல்ல நாய்க்குட்டி! நாய்க்குட்டி திருடி சொன்னபடியெல்லாம் கேட்கிறது. கடிப்பதில்லை. குரைப்பதில்லை.திருடி அதை அவிழ்த்து விட்டாலோ வாசல்படி கூட தாண்டுவதில்லை!

ஆனால் இதெல்லாம் வெறும் நாடகம் என்று அவளுக்குத் தெரியாது. அவளை எப்படியாவது ஏமாற்றி விட்டு ஓடிப் போகணும். அதுதான் நாய்க்குட்டியின் திட்டம்.

ஒரு ராத்திரி. மணி ரெண்டு இருக்கும். திருடியும் திருடனும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். நாய்க்குட்டி பதுங்கிப் பதுங்கி ரோட்டில் இறங்கியது.பின்பு ஒரே ஓட்டம்! முன்பு திருடன் தூக்கிக் கொண்டு வரும்போது முகர்ந்த மணங்கள், பார்த்த காட்சிகள், எல்லாவற்றையும் ஞாபகப்படுத்திக் கொண்டே சென்றது.அது பத்து மைல் ஓடி ராமுவின் வீட்டை அடைந்தது. கேட்டின் கீழே நுழைந்து உள்ளே சென்றது. நாய்க்குட்டி இல்லாததினால் ராமு வாசலை பூட்டியிருந்தான். நாய்க்குட்டி சன்னல் வழியே எட்டிப் பார்த்தது. சத்தமாய் நாலைந்து குரைப்பு!

ராமு எழுந்து விட்டான். குரைப்பொலியை உற்றுக் கேட்டான். வேறு நாயோ? இல்லை. நம்மோட நாய் தான். ராமு வாசல் கதவைத் திறந்தான். நாய்க்குட்டி ராமுவின் மேல் ஒரே பாய்ச்சல். பின்னர் நக்கோ நக்கென்று நக்கிக் கொஞ்சியது.

அடுத்த ஞாயிறு ராத்திரி வந்தது. பனிரெண்டு மணி ஆனது. அதோ கேட்கிறது மணிச்சத்தம். திருடன் திருடி விட்டு வீட்டுக்குப் போகிறான்.

“நாய்க்குட்டி! ரோட்டிற்குப் போக வேண்டாமா?” என்று ராமு கேட்டான்.

நாய்க்குட்டி வாலாட்டியது- வேண்டாம் என்ற அர்த்தத்தில்.

காலையில் ராமு கேட்டைத் திறந்தான்.

“போறியா.. நாய்க்குட்டி!” என்று ராமு கேட்டான்.

நாய்க்குட்டி வாலாட்டியது-இல்லை என்ற அர்த்தத்தில்!

புகைப்படம்-மோகன் தாஸ்வடகரா

2 comments:

  1. ஆஹா ! அருமையான சிறுகதை , ரசித்து ரசித்து முழுவதையும் படித்தேன்.

    உங்களைப் பின்தொடர்ந்து வருகிறேன், நல்ல நல்ல படைப்புகளைத்தாருங்கள்.
    எனது பக்கமும் அவ்வப்போது வந்து போங்கள்.

    ReplyDelete
  2. ஆஹா. அருமையான கதை.
    அழகுக்காக நாய் வாங்கினால் நாம் தான் பாதுகாக்க வேண்டும்.
    நன்றி.

    ReplyDelete