Saturday 10 November 2012

நோயின் மூலம் எது?

 

மனிதநலம் காக்கும் ஹோமியோபதி-4

உதயசங்கர்joisel-2

 

இப்போது டெங்கு காய்ச்சல் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்னால் பன்றிக்காய்ச்சல், அதற்கு முன்னால் எலிக்காய்ச்சல், கோழிக்காய்ச்சல், ஒரு நாலைந்து வருடங்களுக்கு முன்னால் சிக்கன்குனியா காய்ச்சல், மழை பெய்து விட்டால் வைரஸ் காய்ச்சல், என்று புதிதாய் காய்ச்சல்கள், உருவாகியிருக்கின்றன. இந்த மாதிரியான எல்லாநோய்களுக்கும் மூலகாரணம் என்ன? பாக்டீரியாக்கள், வைரஸ்கள், கொசுக்கள், ஈக்கள், கோழிகள், பன்றிகள், எலிகள் என்று எல்லாஉயிர்களையும் குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? நமது உடல் தான் நோய்களுக்கு மூலகாரணம் என்று சொன்னால் நம்பமுடிகிறதா! எப்படி எப்படி என்று கேட்கத் தூண்டுகிறதல்லவா!

ரெம்ப சிம்பிள். பத்துபேர் மழையில் நனைந்தால் யாரோ ஒருவர் அல்லது இரண்டு பேருக்கு ஜலதோஷம் பிடிக்கிறது. நான்கு பேர் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்டால் யாரோ ஒருவருக்கு வயிற்றாலை போகிறது. நமது இந்தியத் திருநாட்டில் சாக்கடை அருகிலும் வாழ்கிறார்கள், பிளாட்பாரத்திலும் வாழ்கிறார்கள். ஆனால் எல்லோருக்கும் எல்லாநோய்களும் வருவதில்லை. அவர்களையெல்லாம் கொசுக்கள் கடிப்பதில்லையா? நம்முடைய சுற்றுச்சூழலைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உலகத்திலுள்ள அத்தனை வைரஸ்களும், பாக்டீரியாக்களும் காற்றில், நீரில், சாக்கடையில், மாசுவில், தூசுவில், இருக்கின்றன. அத்தனையிலிருந்தும் தப்பித்து நாம் ஆரோக்கியத்தோடு இருக்கிறோம் என்றால் அதற்கு நம் உடலே காரணம் இல்லையா?

எந்த உடல் ஆரோக்கியத்துக்குக் காரணமோ, அதே உடல் தான் நோய்க்கும் காரணமாக இருக்க முடியும்!.

இங்கு உடல் என்று சொல்வது மனதையும் சேர்த்துத் தான் என்று புரிந்து கொள்வோம். பிறந்ததிலிருந்து உடல் தானாகவே உயிர் வாழ்வதற்கான அடிப்படைச் செயல்களைச் செய்து கொண்டிருக்கிறது. தன்னுடைய செயல்களைச் செய்வதற்கு நம்முடைய அனுமதியைக் கேட்பதில்லை. அதாவது இதயம் துடிப்பதற்கோ, நுரையீரல் சுருங்கி விரிவதற்கோ, சிறுநீரகங்கள் ரத்தத்தைச் சுத்திகரிப்பதற்கோ கல்லீரல் ரத்தஅணுக்களை உற்பத்தி செய்வதற்கோ, நிணநீர்சுரப்பிகள் பாதுகாப்பு படைவீரர்களை உருவாக்குவதற்கோ, உணர்ச்சிகளைக் கடத்தும் நரம்புமண்டலம் தன் மின்காந்த அலைகளை உருவாக்குவதற்கோ, நம்முடைய மேலான அநுமதியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? எல்லாம் தானாக ஆனால் ஒழுங்கமைதியுடன் தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. இவர்களையெல்லாம் யாரோ மேற்பார்வை பார்க்கிறார் இல்லையா? அவருடைய ஒருங்கிணைந்த மேற்பார்வையில் தான் உடல் தன் ஆரோக்கியத்தை பேணிக் கொள்கிறது. தனக்கு எது தேவை என்று சொல்கிறது. தேவையில்லாததை நாம் செய்யும் போது எச்சரிக்கிறது. ஒரு முறையல்ல பல முறை. நாம் விடாப்பிடியாக அதைச் செய்யும் போது பலத்த குரலில் உடலின் மூலமாக நம் செவிட்டுக் காதுகளில் அலறுகிறது. இதையெல்லாம் ஒரு ஒழுங்குடன் செய்வதற்குக் கற்றுக் கொண்டுள்ளது. நாம் தான் நமது உடலைப் பற்றிய அறியாமையால் உடலைப் பாழ்படுத்துகிறோம்.

மேற்பார்வை பார்க்கிற மேற்பார்வையாளரை அல்லது தலைமைச் செயலாளரை நாம் உயிராற்றல் என்று சொல்லுவோம். இந்த உயிராற்றல் தான் நமது உடலும் மனமும் ஆரோக்கியமாக இருப்பதற்கு அடிப்படைக் காரணம். உயிராற்றல் என்ற இந்த மேற்பார்வையாளர் தான் நமது உடலின் எல்லா இயக்கங்களையும் ஒருங்கிணைத்து எல்லாச்செயல்களும் செவ்வனே நடைபெற உதவுகிறார். இந்த உயிராற்றலில் எப்போது பலவீனம் ஏற்படுகிறதோ அப்போது நோய் உடலைத் தாக்குவதற்கு ஏதுவான சூழலில் உடல் பாதுகாப்பற்று இருக்கிறது. அப்போது புறவயமாக எப்போதும் இருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், லொட்டு லொசுக்கெல்லாம் உடலைப் போட்டுத் தாக்குகிறது. உடல் நோய்வாய்ப் படுகிறது.

ஆக நம்முடைய உடல் நோய்வாய்ப்படுவதற்கு நம்முடைய உயிராற்றலில் ஏற்படும் பலவீனமே காரணம். இந்த பலவீனம் நமது உடலின் நோய் ஏதிர்ப்புத் திறனைக் குறைத்து விடுகிறது. நோய் ஏற்புத்திறன் அதிகரித்து விடுகிறது. இதனால் உடல் எளிதில் மாற்றங்கள் தோன்றுகிறது. நாம் நோயால் பாதிக்கப்படுகிறோம். உயிராற்றல் முழுச் சக்தியோடு இருக்கும் வரை நாம் பாக்டீரியா, வைரஸ், எலி, கோழி, பன்றி, என்று எதைக்கண்டும் அஞ்ச வேண்டியதில்லை.

நலம் காக்க……..தொடர்வோம்.

1 comment: