Tuesday 16 October 2012

வௌவ்வாலுக்கு நன்றி

Parrot-BN_MR7817-w  மலையாளம்- மாலி

தமிழில்- உதயசங்கர்

 

ஒரு கிளியம்மா ஒரு மரத்தின் கிளையில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. அந்த கூட்டில் முட்டைகளிட்டது. முட்டைகள் பொரியும். அதிலிருந்து குஞ்சுகள் வெளியே வரும். அருமைக் குஞ்சுகள்! ஹா..என்ன அழகு!.

கீழே மரத்தின் அடியில் ஒரு பொந்து இருந்தது. பொந்தில் ஒரு கெட்ட பாம்பு இருந்தது. அதற்கு கிளிமுட்டை என்று சொன்னாலே போதும். வாயில் எச்சில் ஊறிவிடும். கிளி முட்டையிட்டு விட்டது என்ற தகவல் அதற்குக் கிடைத்தது. உடனே கிளியம்மாவின் முட்டைகளை விழுங்கி விட்டது. பின்பு பொந்துக்குள் போய் சுருண்டு படுத்துக் கொண்டது. எதுவும் தெரியாதது மாதிரி. திருட்டுப்பயல்!.

கிளியம்மா திரும்பி வந்து பார்த்தால்? கூட்டில் முட்டைகளில்லை! அது கதறி அழுததது. இந்தத் துக்கத்தை எப்படி தாங்க முடியும்?

கொஞ்ச தூரத்தில் ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்தின் கிளையில் ஒரு வௌவால்தாத்தா தொங்கிக் கொண்டிருந்தது. பகலெல்லாம் தொங்கிக் கொண்டிருக்கும், அதுவும் தலைகீழாக.

வௌவால்தாத்தாவுக்கு கெட்டபாம்பின் பழக்கம் தெரியும். எப்போதும் காலையில் பொந்திலிருந்து இறங்கிப் போகும். இரையை பிடித்து விழுங்கி விட்டு உச்சிப்பொழுதுக்குத் திரும்பி வரும். அப்புறம் பொந்துக்குள் சுருண்டு படுத்துக் கொள்ளும். தூக்கம்னா தூக்கம்! அப்படியொரு தூக்கம்!

மறுநாளும் கெட்டபாம்பு கிளம்பியது.

வௌவால்தாத்தா கிளியம்மாவைக் கூப்பிட்டது.

“கிளியம்மா! உன்னோட முட்டைகளை யாரு தின்னா தெரியுமா? பொந்திலே இருக்கிற கெட்டபாம்பு தான். நான் என் கண்ணாலே பார்த்தேன்.” என்று சொல்லியது.

கெட்டபாம்பின் மீது கிளியம்மாவுக்கு எவ்வளவு கோபம் தெரியுமா? ஆனால் என்ன செய்ய? பாவம் அது ஒரு கிளியம்மா தானே! பாம்பை என்ன செய்ய முடியும்.?

“வௌவால்தாத்தா எனக்கு உதவி செய்யுங்களேன்..” என்று அழுது கொண்டே கூறியது.

“எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்..கிளியம்மா.. நீ அடுத்தமுறை முட்டையிடும் போது எனக்குத் தகவல் சொல்லணும் தெரியுதா? மறந்திராதே!” என்று வௌவல்தாத்தா சொன்னது.

தூரத்தில் ஒரு மரத்தடியில் கீரிப்பிள்ளையின் வீடு இருந்தது. வௌவாலின் சேக்காளி கீரிப்பிள்ளை.

வௌவால் கீரிப்பிள்ளையை சென்று பார்த்து,” கீரிக்கண்னா, நீ ஒரு கெட்டபாம்பைக் கொல்லுவியா?” என்று கேட்டது.

கீரிப்பிள்ளை உடனே,”என்னது? கொல்லுவியாவா..சரியாப்போச்சு! நல்லபாம்பையே நான் கொல்லுவேன்..பின்னே கெட்டபாம்பை விடுவேனா?” என்று சொன்னது. வௌவால்தாத்தா நடந்ததெல்லாம் அதற்கு சொல்லியது. கீரிப்பிள்ளை என்ன செய்ய வேண்டும்? எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்தது. பிறகு மரக்கிளைக்கு திரும்பி வந்து தலைகீழாகத் தொங்கியது.

ஒரு நாள் கிளியம்மா வௌவால்தாத்தாவிடம் வந்து,”வௌவால்தாத்தா, நாளைக் காலையிலே நான் முட்டையிடுவேன்..” என்று சொன்னது.

அடுத்தநாள் பொந்திலிருந்து கெட்டபாம்பு கீழே இறங்கியது. கொஞ்சநேரம் கழித்து கிளியம்மா ரெண்டாவது முட்டையும் இட்டது. வௌவால்தாத்தா போய் கீரிப்பிள்ளையைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தது. கீரிப்பிள்ளை மரத்தடியில் உள்ள புதரில் பதுங்கியிருந்தது.

“கிளியம்மா, நீ முட்டைகளைக் கவ்வியெடுத்து மரத்தடியில் வைச்சுக்கோ! அப்புறம் கூட்டில் போய் ஒளிஞ்சிக்கோ..பத்திரமா இருக்கணும்..பார்த்துக்கோ..” என்று வௌவால்தாத்தா தன் திட்டத்தைச் சொன்னது.

மதியம் கெட்டபாம்பு பொந்திற்கு வந்தது. சுருண்டு போய் படுத்துவிட்டது. நல்லா உறங்கணும் என்று நினைத்துக் கொண்டது.

வௌவால்தாத்தா கெட்டபாம்பைக் கூப்பிட்டு,” பாம்பே! கிளியம்மா மறுபடியும் முட்டைபோட்டிருக்கு..முட்டை கீழே விழுந்திருச்சி..ஆனால் உடையல..உனக்கு அதிர்ஷ்டம்தான்..போய் முழுங்கிக்கோ..!” என்று சொன்னது.

இதைக் கேட்டவுடன் கெட்டபாம்பு நிமிர்ந்து பார்த்தது. வேகமாக மரத்தின் அடிக்கு ஊர்ந்து போனது. கிளியம்மாவின் முட்டைகளைப் பார்த்ததும் அதை நோக்கி நேராகச் சென்றது.பதுங்கியிருந்த கீரிப்பிள்ளை என்ன செய்தது தெரியுமா? ஒரே பாய்ச்சல்! ஒரே கடி! முடிந்தது கெட்டபாம்பின் சோலி!

கிளியம்மாவுக்கு சந்தோசமுன்னா சந்தோசம் அப்படி ஒரு சந்தோசம்! அது முட்டைகளைக் கவ்வி எடுத்துக் கொண்டு கூட்டிற்குத் திரும்பியது. முட்டைகள் பொரிந்து கிளிக்குஞ்சுகள் வந்தன. அதன் பிறகும் முட்டைகள் இட்டது. அவைகளும் பொரிந்தன. நிறைய கிளிக்குஞ்சுகள்!

இனி கெட்டபாம்பைப் பற்றி பயப்படவே வேண்டாம்.

அதோடு கிளியம்மா அடிக்கடி,” வௌவால்தாத்தா தாங்கள் செய்த உதவியை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்..” என்று சொல்லிக் கொண்டிருக்கும்.

bat16-c

1 comment: