Friday 28 September 2012

கழுகு

தால்ஸ்தோய்

தமிழில்- உதயசங்கர்

vulture

ஒரு கழுகு முக்கிய சாலையின் அருகில், கடலுக்கு வெகு தூரத்தில் ஒரு மரத்தில் ஒரு கூடு கட்டியிருந்தது. நிறைய குஞ்சுகளைப் பொரித்திருந்தது. ஒரு நாள் தன் குஞ்சுகளுக்கு இரை கொடுப்பதற்காக ஒரு பெரிய மீனை தன் கால் நகங்களில் பற்றிக் கொண்டு பறந்து வந்து கொண்டிருந்தது. அதன் கூடு இருந்த மரத்தின் அடியில் நிறைய ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கழுகின் கால் கால்களில் இருந்த மீனைப் பார்த்ததும் மரத்தைச் சுற்றி நின்று கொண்டு கத்தினார்கள். கற்களை எறிந்தனர்.

கழுகு மீனைக் கீழே போட்டதும் அதை எடுத்துக் கொண்டு அவர்கள் போய் விட்டார்கள். கழுகு கூட்டின் விளிம்பில் உட்கார்ந்தது. கழுகைப் பார்த்ததும் அதன் குஞ்சுகள் தங்கள் தலையை உயர்த்தி உணவுக்காகக் கத்தின.

ஆனால் கழுகு சோர்ந்து போயிருந்தது. திரும்ப கடலுக்குப் பறந்து செல்ல முடியாது.அத்ற்குப் பதிலாக அது கூட்டில் இறங்கி தன் குஞ்சுகளை சிறகுகளால் அணைத்துத் தட்டிக் கொடுத்தது.குஞ்சுகளின் மென்மையான இறகுகளைக் கோதிவிட்டது.கொஞ்சநேரம் பொறுத்துக் கொள்ளச் சொல்லியது. ஆனால் அது தட்டிக் கொடுக்க கொடுக்க குஞ்சுகள் இன்னும் சத்தமாகக் கத்திக் கூப்பாடு போட்டன.

கடைசியில் கழுகு தன் கூட்டை விட்டு மேலே உள்ள கிளைக்குத் தாவி அமர்ந்தது.ஆனால் கழுகுக்குஞ்சுகள் இன்னும் பரிதாபமாக கீச்சிட்டன.

அதன் பிறகு கழுகு ஒருபெரிய கத்தலுடன், தன் சிறகுகளை விரித்தது. கடலை நோக்கி வேகமாகப் பறந்து சென்றது.

மிகவும் தாமதமாக மாலையில் கழுகு கூட்டுக்குத் திரும்பியது. மிக மெதுவாக, தாழ்வாக பறந்து வந்தது. அதன் கால்களில் ஒரு பெரிய மீன் இருந்தது.

மரத்தின் அருகில் நெருங்கியதும் ஆட்கள் யாராவது இருக்கிறார்களா என்று சுற்றும்முற்றும் பார்த்தது. பின்னர் தன் சிறகுகளை சட்டென ஒடுக்கிக் கொண்டு, கூட்டின் விளிம்பில் சென்று அமர்ந்தது.

கழுகுக்குஞ்சுகள் தங்கள் திறந்த அலகுகளை மேலே தூக்கின. தாய்க்கழுகு மீனைக் கிழித்து தன் குஞ்சுகளின் பசியாற்றியது.

2 comments:

  1. தெளிவான மொழியாக்கம்.அன்பை உணர்த்துகிற குறுஞ்சித்திரம்.வாழ்த்துகள் உதயசங்கர்

    ReplyDelete