Tuesday 14 August 2012

ஐந்து பேரும் ஒரு வீடும்

உதயசங்கர்children 01

 

கையூர் என்ற ஊரில் சுட்டான், பாம்பான், மோதிரான், சுண்டான், கட்டையான், என்று ஐந்து சகோதரர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து பகலில் கடுமையாக உழைத்தனர். உழைப்பில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருந்ததால் எத்தனை கடினமான வேலையையும் மிக எளிதாக அவர்கள் செய்து முடித்தனர். அவர்களுடைய உழைப்பினால் வயல் செழித்தது. தானியங்கள் ஏராளமாய் விளைந்தன. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.

இரவில் அவர்கள் அனைவரும் உறங்குவதற்கு ஒரு முற்றவீடு இருந்தது. அந்த முற்றவீட்டில் அவர்களே தூண்களாகவும், கூரையாகவும் மாறிப் பாதுகாப்பாக ஓய்வு எடுத்துக் கொண்டனர். விடிந்ததும் அவர்கள் உற்சாகமாய் வேலைக்குக் கிளம்பி விடுவார்கள்.

ஒரு நாள் இரவில் தூக்கம் வராமல் சுண்டான் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தது. அதற்குக் காரணமும் இருந்தது. அன்று மதியம் வேலை செய்து கொண்டிருந்தபோது, கட்டையான் சுண்டானைப் பார்த்து,”ஏலேய்..சோனிப் பயலே..நல்லாப் பாத்துப் பிடிலேய்…” என்று திட்டியது.

இதைக் கேட்டதும் சுண்டானின் முகம் சுண்டி விட்டது. அப்போதிலிருந்து சுண்டானுக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றிக் கொண்டேயிருந்தது. சுண்டான் இரவெல்லாம் யோசித்து யோசித்து ஒரு திட்டம் தீட்டியது.

காலையில் எழுந்தவுடன், பாம்பானையும், சுட்டானையும், மோதிரானையும், தனித்தனியே பார்த்துப் பேசியது. கட்டையானின் கர்வத்தை அடக்க வேண்டும் என்று தந்திரமாய் பேசியது. எல்லோரும் சேர்ந்து அவனை விரட்டவேண்டும் என்றது. அதை மற்றவர்களும் முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் சுண்டான் அதையும் இதையும் சொல்லி மற்ற அனைவரையும் ஏற்றுக் கொள்ளச் செய்து விட்டது. அன்று மாலைவரை கட்டையானுடன் மற்ற நான்கு பேரும் சண்டை போட்டுக் கொண்டேயிருந்தனர். கட்டையான் கோபித்துக் கொண்டு போய் விட்டான்.

கட்டையான் போன பிறகு வேலை கடுமையாகத் தெரிந்தது. இரவில் அனைவரும் உறங்க முற்றவீட்டுக்கு வந்தனர். அயர்ந்து போய் படுக்கலாம் என்று வந்தால் ஒரு தூணும், கூரையின் ஒரு பகுதியும் இல்லை. அது கட்டையானின் இடம். அதனால் அந்த முற்றவீடு ஒரு பக்கமாகச் சாய்ந்து விட்டது. குளிர்ந்த காற்று உள்ளே வர ஏதுவாக இருந்தது. யாராலும் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.

மறுநாள் காலையில் சோர்வுடன் அனைவரும் எழுந்தனர். அன்று வேலையே பார்க்க முடியவில்லை. முன்பு மிக எளிதாக செய்த வேலைகள் இன்று மிகக் கடினமாக இருந்தன. சரியாக உறக்கமும் இல்லாததால் மத்தியானத்துக்குள் நான்கு பேரும் அசந்து விட்டனர். வேலை செய்யவே முடியவில்லை. அப்போதே முடிவு செய்து விட்டனர். போய் கட்டையானைக் கூப்பிட்டுக் கொண்டு வந்து விடவேண்டும்.

கட்டையானைக் கூட்டிக் கொண்டு வந்ததும், சுட்டானும்,மோதிரானும், பாம்பானும், சேர்ந்து சுண்டானைக் குறை சொல்ல ஆரம்பித்தனர். சுண்டானை வெளியேற்ற வேண்டும் என்று கூப்பாடு போட்டனர்.

கட்டையான் அவர்களை அமைதிப் படுத்தியது.

“மறுபடியும் சுண்டான் செய்த தவறையே நீங்களும் செய்யக் கூடாது. நான் சுண்டானைத் திட்டியதும் தவறு தான்..நாம் ஐந்து பேரும் ஒற்றுமையாக் இல்லாவிட்டால் இந்த உழைப்பும் அதன் பலன்களும் இல்லை. அதே போல நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது..அதைத் தெரிந்துகொண்டாலே போதும்.. ஒருவருக்கொருவர் பொறாமைப்படவோ, வெறுப்படையவோ தேவையில்லை..” என்று கட்டையான் சொன்னது.

அதைக் கேட்ட சுண்டானும் மனம் நெகிழ்ந்து எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டது.

அன்றிலிருந்து அந்த ஐந்து பேரும் முற்றவீட்டில் சுகமாக வாழ்ந்து வந்தனர்.

No comments:

Post a Comment