Friday 10 August 2012

பாய்மரப்பாடல்

உதயசங்கர்

Mohan Das (17)

ததும்பிக் கொண்டிருக்கிறது என் கோப்பை

பீத்தோவனின் இசைக்கோர்வையை

தன் உடலில் வரைந்து திமிறிய

கடலின் அலைகளைப் போல

உயர்ந்தும் தாழ்ந்தும்

எதையோ வேண்டுகிறது உன்னிடம்

துடிதுடிப்புடன் தன் இதயத்தை

உன் திசை நோக்கிப் படகாய் செலுத்துகிறது 

உயிர்க்காற்றின் காதலைச்

சடசடக்கும் பாய்மரத்துணியில் 

பாடல்களாய் எழுதுகிறது 

நடுங்கும் உன் உதடுகளின்

கரைகளில் சலசலக்கும் சிற்றோடையாய்

ஊர்ந்து உன் உயிரை

என் கடலில் முத்தெடுக்க

அழைக்குமென் கோப்பையின்

குரல் கேட்கிறதா?

ததும்பும் என் கோப்பைக்கும்

உன் உதடுகளுக்கும் உள்ள தூரத்தில்

ஊஞ்சலாடுகிறது.

என் வாழ்வும் சாவும்

புகைப்படம் – மோகன்தாஸ் வடகரா

1 comment: