Wednesday 11 July 2012

ரேடியோ பல்லி

மலையாளத்தில் – மாலி

 

தமிழில் – உதயசங்கர்

lizard

”ராமு கதை கேட்கறீயா?”

கேட்டது யார்? ராமு சுற்றிலும் பார்த்தான். யாரையும் பார்க்க முடியவில்லை.

“கதை கேட்கறீயான்னு கேட்டேன்..” மறுபடியும் கேள்வி.

”கண்டிப்பா கேட்கறேன்..ஆனா கேக்கறது யாருன்னு முதல்ல தெரியணும்” என்று ராமு சொன்னான்.

“ரேடியோவுக்குள்ளே பார்..” என்றது அந்தக் குரல்.

ராமு அங்கே பார்த்தான்.ஒரு பல்லி.

“பல்லியே! நீங்களா பேசியது?” என்று ராமு கேட்டான்.

“ஆமா..நான் தான்..” என்று பல்லி சொல்லியது.

பழுதான ரேடியோ அது. ராமுவின் அப்பா அதை சரி செய்ய முயற்சித்தார். முடியவில்லை. அதை அப்படியே ஒரு பெஞ்சில் வைத்திருந்தார்.

“சரி.. கதை சொல்லு! கேட்கறேன்..” என்று ராமு சொன்னான்.

பல்லி ஒரு கதை சொல்லியது.

”இன்னொரு கதை..” என்று ராமு ஆவலுடன் கேட்டான்.

“ஒரு நாளைக்கு ஒரு கதைதான் சொல்வேன்..” என்று பல்லி சொன்னது.

ரெண்டாம் நாள் ரெண்டாவது கதை.

“பல்லி! நீங்கள் எப்படி ரேடியோவுக்குள்ளே போனீங்க?” என்று ராமு கேட்டான்.

“அது ரொம்ப சுவாரசியமானது ராமு. என்னோட அம்மா முட்டையிட இதற்குள் வந்தாள். இட்ட முட்டைகளை அம்மா எண்ணி வைத்தாள். அப்புறம் ஒரு நாள் முட்டைகளை எடுத்துட்டு வேற இடத்துக்குப் போனாள்.போகும்முன்பு இன்னொரு தடவை முட்டைகளை எண்ணினாள். எண்ணிக்கை சரியாயிருக்குன்னு நினைத்தாள். ஆனால் அம்மா நினைச்சது தப்பு. ஒரு முட்டை குறைவாக இருந்தது. அந்த முட்டை உருண்டு வேற இடத்தில் கிடந்தது. அதிலிருந்து தான் நான் பிறந்தேன். பிறந்ததிலிருந்து இங்கே தான் இருக்கிறேன்” என்று பல்லி சொன்னது.

பதினைந்து நாட்கள் கழிந்தன. பதினைந்து கதைகளும் கேட்டாயிற்று. எவ்வளவு அருமையான கதைகள்!

“பல்லி உங்களுக்கு இந்தக் கதைகள் எங்கேயிருந்து கிடைத்தன?” என்று ராமு கேட்டான்.

“ரேடியோவில குழந்தைகளுக்கான கதைகள் இருக்கே..பொதுவாக சில கதைகள் நல்லாயிருக்கும்.. அதையெல்லாம் நான் சேகரிச்சு வைத்திருந்தேன்.. எங்கே சேகரிச்சு வைத்திருந்தேன் தெரியுமா? என் வாயிலியா?இல்லை. என் மூக்கிலியா? இல்லை. என் வாலிலா? இல்லை அப்புறம் எங்கே? என் மனசில்..!” என்று பல்லி சொல்லியது.

நாற்பது நாட்கள் கழிந்தன.அப்போது ராமு நாப்பது கதைகள் கேட்டிருந்தான். ஒரு கதை கூட மோசமாக இல்லை.

“பல்லி பெரியவர்களுக்கான கதைகளும் இருக்குமே! நீங்க அதையும் கேட்டிருக்கீங்களா..” என்று ராமு கேட்டான்.

“இல்லை.. அதைக் கேட்டா எனக்கு தூக்கம் வந்துரும். தூங்கறதுக்கு எனக்குப் பிடிக்காது..” என்று பல்லி நல்லுரை பகர்ந்தது.

நூற்றியொரு நாட்கள் கழிந்தன. நூற்றியொரு கதைகளும் கேட்டாச்சு. நூற்றியிரண்டாம் நாள் வந்தது.

“நூத்தியிரண்டாவது கதையைச் சொல்லு..” என்று ராமு ஆவலுடன் கேட்டான்.

“இல்ல.. நூத்தியொரு கதைகள் தான் என்னிடம் இருந்தன.. நான் என்ன செய்ய?” என்று பல்லி பெருமூச்சுடன் சொல்லியது.

ராமுவுக்கு மிகுந்த ஏமாற்றமாகி விட்டது.

“ராமு நான் உனக்கு கதைகள் சொன்னேன்..பதிலுக்கு நீ எனக்கு ஒரு உதவி செய்வியா? என்னை வெளியே விடறதுக்கு உன்னோட அப்பாகிட்ட சொல்றியா?” என்று பல்லி ஆவலுடன் கேட்டது.

ராமு எல்லாவற்றையும் அப்பாவிடம் சொன்னான். அப்பா உடனே என்ன செய்தார் தெரியுமா? ரேடியோவின் பின்புறம் திருகாணிகளைக் கழற்றினார். கனம் குறைந்த பலகையை எடுத்து வைத்தார். வெளியே போவதற்கு பல்லிக்கு எளிதாக இருந்தது.

“எங்கே போறீங்க பல்லி?” என்று ராமு கேட்டான்.

“அடுத்த வீட்டில் ஒரு புதிய ரேடியோ வந்திருக்கு.. அதைச் சுவத்தில மாட்டியிருக்காங்க.. நான் ரேடியோவுக்கும் சுவத்துக்கும் நடுவுல போய் இருந்துக்குவேன்.. பழுதாச்சின்னா நான் உள்ளே போய் இருந்துக்குவேன்.. எனக்கு இன்னமும் குழந்தைகள்  கதைகள் கேட்கணும்..நான் போகட்டுமா? வணக்கம்.” என்று பல்லி சொன்னது.

”வணக்கம்” என்று நான் சொன்னேன்.

ரேடியோபல்லி ஊர்ந்து போனது.

No comments:

Post a Comment