Wednesday 20 June 2012

என் பெரியப்பா புதுமைப்பித்தன்

உதயசங்கர்

  puthumai pithan

எல்லோருக்கும் போலவே எனக்கும் ரோல் மாடல்கள் இருந்தார்கள். ஒவ்வொரு பிராயத்துக்கும் ஏற்ப அவர்கள் இடம் மாறிக் கொண்டே

இருந்தார்கள். எனது சிறுபிராயத்தில் வசந்தன் மாமா எனது ரோல் மாடலாக இருந்தார். சிவந்த நிறமும், சுருள் சுருளான தலைமுடியும், சிரித்த

முகமும், ஏதோ ஒரு சாயலில் எம்.ஜி.ஆரைப் போல இருந்ததாக எல்லோரும் சொல்லிய பெருமையுடன் இருந்த வசந்தன் மாமா என்னுடைய

கனவுநாயகனாகவே இருந்தார். அது மட்டுமல்ல அடிக்கடி அவர் கோவில்பட்டியில் அப்போது மிகவும் பேமஸாக இருந்த மனோரமா

ஹோட்டலில் வாங்கிக் கொடுத்த தோசையும் சாம்பாரும் கூட ஒரு காரணம். அவர் மின்சாரத்துறையில் வயர்மேனாக வேலைபார்த்தார். அவர்

எங்கு போனாலும் மரியாதை தான். எல்லோரும் அவருக்கு ஏதோ ஒரு வகையில் சலுகை செய்தனர். இதையெல்லாம் பார்க்கப் பார்க்க எனக்கு

அதிசயமாக இருக்கும். நான் பெரியவனான பிறகு என் வசந்தன் மாமாவைப் போல வயர்மேனாகப் போக வேண்டும் என்று நினைத்தேன்.

ஏனெனில் அப்போது வேணுங்கிறபோதெல்லாம் சாம்பார் தோசை சாப்பிடலாமே.

 

ஆறாங்கிளாஸ் படிக்கிறபோது தமிழய்யா நாகராஜன். அவர் இனிமையான குரலில் தமிழ் செய்யுள்களை பாடும்போது வகுப்பே கட்டுண்டு

கிடக்கும். அவரைப் போலவே பாடவேண்டும் என்று நினைத்து சினிமா பாடல்களை தொண்டை கிழிய கத்தித் தீர்த்திருக்கிறேன். அப்போது

டி.எம்.சௌந்திரராஜன் மாதிரி, எஸ்.பி. பாலசுப்ரமணியன் மாதிரி பெரிய பாடகராக வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். அதற்காக

கோவில்பட்டியில் வெகுவிமரிசையாக வருடந்தோறும் நடந்து கொண்டிருந்த திருவாதிரை இசைவிழாவில் முன்னாடி போய் உட்கார்ந்து பெரிய

ஆட்கள் பாட்டின் சுதிக்கேற்ப விரல்களை ஆட்டுவதைப் போல நானும் எதுவும் தெரியாமலே ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்

. கடைசியில் எங்கள் கன்னிவிநாயகர் கோவில் தெருவில் என் வீட்டு முற்றத்திலிருந்து கொண்டு தீப்பெட்டிக்கட்டு ஒட்டிக்கொண்டோ,

தீப்பெட்டிக்கட்டை அடுக்கிக்கொண்டோ, நான் போடும் கூப்பாட்டை எல்லோரும் என் அம்மாவுக்காகச் சகித்துக் கொண்டார்கள் என்று

நினைக்கிறேன்.

 

ஒன்பதாம் வகுப்பு படிக்கிறபோதே என் சிந்தனையில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவர் தமிழாசிரியர் குருசாமி. வழக்கமான

தமிழாசிரியர்களைப் போல அவர் செந்தமிழில் பேசுவதில்லை. சாதாரணமாகவே பாடம் நடத்தினார். ஆனால் அவர் எந்தப்பாடத்தை

நடத்தினாலும் அதனூடாக பகுத்தறிவு கருத்துகளை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். மூடநம்பிக்கைகளைக் கேலியும் கிண்டலும் செய்தார்.

என்னுடைய சிந்தனையில் மிக முக்கியமான திருப்புமுனையை அவர் தான் ஏற்படுத்தினார் என்றால் மிகையில்லை. அத்தனை சிறிய வயதில்

கடவுளைக் கிண்டல் செய்து வீட்டில் அடி வாங்கிய ஞாபகங்கள் இருக்கின்றன. காந்திமைதானத்தில் பெரியாரின் கூட்டத்தை முன் வரிசைப்

புழுதியில் உட்கார்ந்து கேட்டிருக்கிறேன். ஆனால் தமிழாசிரியர் குருசாமியைப் போல ஆக வேண்டும் என்று ஏனோ தோன்றவில்லை. அப்போது

நான் படித்த ஆயிரவைசிய உயர்நிலைப்பள்ளியில் புதிதாக இரண்டு ஆசிரியர்கள் சேர்ந்திருந்தனர். ஸ்கூல் பையன்கள் எல்லோரின் கண்களும்

அவர்கள் மீது தான். அவ்வளவு ஸ்மார்ட்டாக, ஸ்டைலாக, இருந்தார்கள். அவர்கள் வகுப்பு எடுக்கும் விதமே அலாதியாக இருந்தது. யாரையும்

டேய்..டோய் என்று கூப்பிடுவதில்லை. எல்லோரையும் ஐயா என்ற விகுதியுடனே அழைத்தார்கள். எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒருவர்

அறிவியல் பாடம் எடுத்த தவசிராஜ், இன்னொருவர் கணக்குப்பாடம் எடுத்த பழனிமுத்து. அவர்களை அண்ணாந்து பார்த்தபடியே அவர்கள்

வகுப்புப்பையன்களும், அந்தப் பையன்கள் சொன்னதைக் கேட்டு மற்ற பையன்களும் ஈக்களை மாதிரி அவர்களை மொய்த்தார்கள். எனக்கு

கணக்கு மூணாங்கிளாஸிலிருந்தே பிணக்கு. எனவே கணக்கில் எப்போதும் பார்டரைத் தாண்டி கொஞ்சம் மதிப்பெண்கள் வாங்கித் தப்பித்து

விடுவேன். எனவே பழனிமுத்து மீது எனக்கு அவ்வளவு ஈர்ப்பில்லை. அறிவியலில் எனக்கு ஆர்வம் அதிகம். அதோடு சின்னப்பத்தில் எனக்கு

வகுப்பாசிரியராகவும் தவசிராஜ் இருந்ததால் அவரைப் பூஜித்தேன். அவரை மாதிரியே பேசவும். நடக்கவும், தலைப்பட்டேன். இது எது வரை

போனதென்றால் அவருடைய கையெழுத்தைப் போட்டுப் பழகி, அதைத் தவறுதலாக என்னுடைய ரிகார்டு நோட்டிலேயே போடுகிற அளவுக்கு

எனக்கு பைத்தியம் முற்றி விட்டது. என்னை ஆகர்சித்த ஆளுமைகளை அனுகணமும் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

 

இப்படி ஹாக்கி விளையாடும்போது ஹாக்கி பிளேயர்கள் பின்னாலேயே சுற்றுவது, நேரங்காலம் தெரியாமல் அதிகாலை, உச்சிவெயில், மாலை,

இரவு என்று எந்த நேரமும் ஹாக்கி மட்டையோடு திரிவது என்று எதையெடுத்தாலும் அதே சிந்தனையாக இருப்பது என்று இருந்தேன். நான்

கிரிக்கெட் விளையாடப் பழகும்போது தொலைக்காட்சி கிடையாது. இந்தியாவில் விளையாடும்போது மட்டுமே ரேடியோ வர்ணனை. மற்றபடி

எல்லாம் செய்தித் தாள்கள் வழிதான். ஆனால் நான் டைப்ரைட்டிங் படித்துக்கொண்டிருந்த இன்ஸ்டிடியூட் ஆசிரியர் ஹிந்து பத்திரிகை

ஏஜெண்டாகவும் இருந்தார். அதனால் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் பத்திரிகை அங்கே வரும். அதை அவ்வப்போது சுட்டுக் கொண்டு வந்து அதிலுள்ள

கிரிக்கெட் வீரர்களின் வண்ணப்புகைப்படங்களை ஆல்பம் மாதிரி என்னுடைய பழைய நோட்டில் ஒட்டி வைத்து தினமும் ஒரு முறையாவது

அவர்களைப் பார்த்து விடுவேன். கவாஸ்கர், சௌகான், மொகிந்தர் அமர்நாத், சுரீந்தர் அமர்நாத், கிர்மானி, பிரசன்னா, சந்திரசேகர்,

வெங்கட்ராகவன், கெய்க்வாட், இளம் கபில்தேவ், என்று அத்தனை கிரிக்கெட் வீரர்களையும் தரிசனம் செய்து விடுவேன். இவர்களுக்கடுத்தது

எனக்கு மிகவும் பிடித்த வெளிநாட்டு வீரர்களான ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி, தாம்ஸன், மேற்கிந்தியத் தீவுகளின் கேரி சோபர்ஸ்,

விவியன் ரிச்சர்ட்ஸ், ஹோல்டிங், என்று அவர்களின் படங்களை ஒட்டி வைப்பது அதைப்பார்ப்பதென்பது எனக்கு ஏதோ ஒரு வகையில்

உத்வேகம் தருவதாக ஒரு கற்பிதம் இன்னமும் இருக்கிறது.

 

கல்லூரிக்காலத்தில் இலக்கியம் அறிமுகமாயிற்று. கல்லூரியில் நாங்கள் சென்று வந்த சுற்றுலா பற்றிய கட்டுரையே பிரசுரமான என்னுடைய

முதல் படைப்பு என்று ஞாபகம். அப்போது எனக்கு தமிழ்ப்பேராசியர்களாக இருந்த அரங்கராசன், விஜயராகவன், இரண்டுபேருமே என்னை

அழைத்துப் பாராட்டினார்கள். அந்த உற்சாகத்தில் நான் கல்லூரி நூலகத்திலிருந்து நிறையப் புத்தகங்களை எடுத்துப் படித்தேன்.

எல்லாஇளைஞர்களைப் போல நானும் கவிதை எழுத ஆரம்பித்தேன். சிற்பி, அபி,தமிழன்பன், கங்கைகொண்டான், புவியரசு,இன்குலாப், என்று

வானம்பாடி கவிஞர்கள் என்னை ஈர்த்தனர். அவர்களைப் போலவே கவிதைகள் எழுதிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பின்பு தான்

கோவில்பட்டியில் இலக்கியகுழாம் ஒன்று இருப்பது தெரிய வந்தது. அதன்பின்பு என் உலகம் மாறி விட்டது.

 

புதுமைப்பித்தன் சிறுகதைகள் என்ற புத்தகம் தான் நான் முதன்முதலில் வாசித்த சிறுகதைப்புத்தகம் என்று நினைக்கிறேன். அதை வாசித்தவுடன்

அதுவரை ஏற்படாத ஒரு மிகப்பெரிய மாற்றத்தை நான் எனக்குள் உணர ஆரம்பித்தேன். நான் வாசித்திருந்த அத்தனையையும் புரட்டிப் போட்டு

விட்டார் புதுமைப்பித்தன். மொழியின் உக்கிரத்தை அவர் உச்சகதியில் உணரச் செய்தவர். உலகைப்பற்றி, மானுட அவலங்களைப் பற்றி,

மனிதமனவக்கிரங்களை, விகசிப்புகளை, துயரங்களை, அவரை விட வலிமையாகத் தமிழிலக்கியத்தில் யார் சொல்லியிருக்கிறார்கள். அவர் இந்த

உலகத்தையே எள்ளலோடு விமரிசித்தார். அந்த விமரிசனத்தின் ஆழத்தில் மானுடத்தின் மீதான பேரன்பு கவிந்திருந்தது. இதை உணராதவர்கள்

அவரை அவநம்பிக்கைவாதி என்று குற்றம் சாட்டினார்கள். அவர் இந்த உலகத்தின் மீது, மானிடவர்க்கத்தின் மீது, நம்பிக்கை கொள்ளவே

நினைத்தார். ஆனால் யதார்த்தம் அப்படியில்லையே. எனவே அதை விமரிசனம் செய்தார். அவருடைய புத்தகங்களைத் தேடித் தேடி வாசித்தேன்.

நம் காலத்தின் மகத்தான கலைஞனாக புதுமைப்பித்தன் திகழ்ந்தார்.

 

தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தன் வரலாற்றை வாசிக்கும்போது எனக்கு தமிழ்ச்சமூகத்தின் மீது ஆறாக்கோபம் வந்தது.

மானுடமேன்மைக்காக,இலக்கியத்தை வழியாகக் கொண்டு, அதற்காக தன் வாழ்வையே பணயம் வைத்த அந்த உன்னதக்கலைஞன் தன்

வாழ்நாள் முழுவதும் வறுமையின் முட்கிரீடம் சுமந்தே வாழ்ந்து தீர்த்தான். அவர் அவருடைய துணைவியாருக்கு எழுதிய கடிதங்களின்

தொகுப்பான கண்மணி கமலாவுக்கு.. என்ற கடிதத் தொகுப்பைப் படிக்கிற யாருக்கும் கண்ணீர் வராமல் இருக்காது. காலணாவுக்கும், ஒரு

ரூபாய்க்கும் அவர் பட்டபாடு …..அப்போதிருந்து சினிமாவின் மீது தமிழ்ச்சமூகம் கொண்டிருக்கும் மோகத்தில் ஒரு சதவீதமரியாதை

இலக்கியத்தின்மீது இருந்திருந்தால் நாம் புதுமைப்பித்தனை மட்டுமல்ல, பல எழுத்தாளர்களை இழந்திருக்கமாட்டோம். விதியே விதியே என்ன

செய்யப் போகிறாய் என் தமிழ்ச்சமூகத்தை?

 

புதுமைப்பித்தன் காலத்திய மற்ற எழுத்தாளர்களை விட இலக்கிய மேதையாக புதுமைப்பித்தன் ஏன் சித்தரிக்கப்படுகிறார் என்ற கேள்விக்கு

அவருடைய படைப்புகள் தான் பதில் சொல்லும். கலைஞன் தான் காலத்தைக் கேள்வி கேட்கிறான். கலைஞன் தான் காலத்தைக் கேலி

செய்கிறான். கலைஞன் தான் காலத்தை நிறுத்தி வைக்கிறான். கலைஞன் தான் காலத்தை அடைகாக்கிறான். கலைஞன் தான் காலத்தை

மாற்றுகிறான். தன் படைப்புகளின் மூலம் மனிதமனசாட்சியைத் தட்டியெழுப்புகிறான். மனிதகுலத்தை மேன்மையான வாழ்வை நோக்கி உந்தித்

தள்ளுகிறான். இதற்கான தவமாகவே இலக்கியவாழ்வை மேற்கொள்கிறான். வறுமையில் உழன்று, கண்ணீர் சிந்தி, புறக்கணிப்புகளைத் தாங்கிக்

கொண்டு, அவமானங்களைச் சகித்துக் கொண்டு சாதாரண லௌகீக வாழ்வின் சுகங்களை இழந்து, தனக்கும் தன் குடும்பத்துக்கும்

துயரங்களையே பரிசளித்து, கலையின் பலிபீடத்தில் தன்னையே பலி கொடுக்கிறான். பாரதி, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, கு.ப.ரா.

கரிச்சான்குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம், தமிழ் ஒளி, தருமு சிவராம், ஜி.நாகராஜன், ஆத்மநாம்,…..என்று எத்தனையெத்தனை பேர்?

 

புதுமைப்பித்தனும் அப்படி தன்னைப் பலி கொடுத்தவன். அவனுடைய சாகாவரம் பெற்ற படைப்புகளான, சாபவிமோசனம், சிற்பியின் நரகம், ஒரு

நாள் கழிந்தது, அகல்யை, பிரம்மராஷஸ், கபாடபுரம், செல்லம்மாள், காலனும் கிழவியும், கடவுளும் கந்தசாமிபிள்ளயும், துன்பக்கேணி, கல்யாணி,

மகாமசானம், இப்படி எத்தனை கதைகள்? காலச்சுவடு பதிப்பகம் செம்பதிப்பாக புதுமைப்பித்தனின் கதைகளை வெளியிட்டிருக்கிறது. ஆனால்

இன்னமும் தமிழ்ச்சமூகத்துக்கு உணர்வு வரவில்லையே. ஏனெனில் யாரிடமாவது புதுமைப்பித்தனைப் பற்றிப் பேசினால் “ யாரு சினிமாவில

பாட்டெழுதுவாரே அந்த புலமைப்பித்தனையா சொல்றீங்க? “ என்று கேட்கிறார்கள். நம்முடைய உண்மையான மதிப்பு மிக்க ஆளுமைகள்

யாரென்றே சமூகத்துக்குத் தெரியவில்லையே என்ற ஆழ்ந்த வருத்தம் உண்டாகிறது.

 

நான் என்னுடைய வழக்கம் மாறாமல், இலக்கியம் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் புதுமைப்பித்தனை என்னுடைய மானசீகக்குருவாக வரித்துக்

கொண்டிருந்தேன். புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாற்றுப்புத்தகத்தில் இருந்த புதுமைப்பித்தனின் புகைப்படத்தை எடுத்து கண்ணாடிக்கடையில்

கொடுத்து பிரேம் போட்டு என் வீட்டில் மாட்டியிருந்தேன். தினமும் அந்தப்புகைப்படத்திலுள்ள புதுமைப்பித்தனோடு பேசுவதுமுண்டு. அப்போது

முருகேசன் என்ற கவிஞர் என் வீட்டுக்கு வந்திருந்தார். அவருடைய கவிதைகள் ஒன்றோ இரண்டோ தினமலர், தினத்தந்தி வாரமலர்களில்

வெளிவந்திருந்தது. அவர் பேசும்போதும் சரி, எழுதும்போதும் சரி கவிஞர்.முருகேசன் என்றே தன்னை அழைத்துக் கொள்வார். அவர் என்

வீட்டிற்கு வந்ததிலிருந்து புதுமைப்பித்தனின் புகைப்படத்தையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பேச்சினூடே அடிக்கடி அந்தப்

புகைப்படத்தைப் பார்த்த அவரிடம் நான்,

 

“ என்ன பாக்கிறீங்க “ என்று கேட்டேன்.

 

“ இல்ல போட்டோவில யாரு உங்க அப்பாவா? “

 

நான் ஒரு கணம் அமைதி காத்தேன். புதுமைப்பித்தனைத் திரும்பிப் பார்த்தேன். அந்த ஏறுநெற்றியும், ஒளிபொருந்திய கண்களும், சற்றே

உதடுகளைப் பிரித்துக் கொண்டு வெளித் தெரிந்த தெற்றுப்பற்களோடு என் புதுமைப்பித்தன் என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். நான் திரும்பி

கவிஞர்.முருகேசனிடம் சொன்னேன்.

 

“ இல்லை.. என் பெரியப்பா..”

நன்றி- மீடியா வாய்ஸ்

2 comments:

  1. பகத்சிங் லெனினைத் தன் சித்தப்பா என்று சொன்னாராம்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete