Sunday 3 June 2012

நான் ஏன் எழுதுகிறேன்?

sakkaria

ஸக்கரியா 

தமிழில்-உதயசங்கர்

நான் எழுதுவதற்குக் காரணம் ஒரு வாசகனாக இருப்பதினால் தான் என்று எனக்குத் தோன்றுகிறது. வாசிப்பு எனக்கு விருப்பமான ஒன்று என்பதால் எழுத்தும் எனக்கு விருப்பமானது. உழக்கைப் போல உள்முகப்பார்வை கொண்ட புத்தகப்புழுப் பையன் மைசூரில் எழுத்தாளனாக உருமாறினேன். இன்னமும் அடிப்படையில் நான் வாசகப்பிரியனும், புத்தகப்புழுவுமாகத்தான் இருக்கிறேன். என்னுடைய வாழ்வில் மிக முக்கியமான செல்வமும் சொத்தும் புத்தகங்கள் தான். அந்த உலகத்தோடுள்ள உறவை வெளிப்படுத்துவதே எனது எழுத்து.

இவ்வளவும் சொல்லிய பிறகு சில சில்லரை விஷயங்களே மீதியுள்ளது. இன்றைக்கு எழுத்து எனக்கு அன்றன்றைக்கான அப்பம். எழுத்தினால் வாழ்க்கையை முழுவதுமாய் வாழ்ந்து விட முடியாதெனினும், எழுத்தினூடே தான் எனக்கு விருப்பமான வாழ்வின் திசைகளைத் தேர்ந்தெடுக்க முடிந்தது. பேனா எனக்கு மானசீகமாகவும் லௌகீகமாகவும் மேன்மையான ஒரு வாழ்வைத் தந்து கொண்டிருக்கிறது.

கட்டுரைகளும், பத்திகளும் எழுதுவதற்கிடையில் என்னுடைய சமூகத்தினுடைய பல பிரச்னைகளை எனக்கு ஆத்மபூர்வமாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. இது ஒரு பிரச்னையான விஷயம் தான். மத அடிப்படைவாதம் போன்ற பைத்தியக்காரத்தனங்கள் எழுத்தாளர்களையும் வீழ்த்துகிற இக்காலத்தில், இலக்கிய அனுபவத்துக்கு வெளியில் நின்று சிந்தனையின் கருவாக, மொழியை மாற்றவே நான் விரும்புகிறேன்.

இன்று நான் எழுதாமலிருக்கும் போது மொழியை எதிர்கொள்வதே என் மனதிலுள்ள முதல் நிகழ்ச்சிநிரல். மொழி என்னோடும் என்னுடைய ஆத்மாவோடும் என்ன செய்யப் போகிறது? நான் மொழியை எப்படி என்னுடைய கற்பனைக்குக் கொண்டு வரப் போகிறேன். நான் எழுதாமலிருக்கும் போதெல்லாம் இந்த மல்லுக்கட்டின் சந்தோஷமும், துக்கமும், வெற்றிகளும், தோல்விகளும், என்னை உற்சாகப்படுத்துகிறது.

வாசிப்பினூடே எனக்கு வாய்த்த மொழியை எழுத்தினூடே நான் கொண்டு வர முயற்சி செய்து கொண்டேயிருப்பது தான் என்னுடைய எழுத்து என்று தோன்றுகிறது. உண்மை யாருக்குத் தெரியும்?

நன்றி- கரண்ட் புக்ஸ் புல்லட்டின் மார்ச் 2002

2 comments:

  1. இன்றைக்கு எழுத்து எனக்கு அன்றன்றைக்கான அப்பம். எழுத்தினால் வாழ்க்கையை முழுவதுமாய் வாழ்ந்து விட முடியாதெனினும், எழுத்தினூடே தான் எனக்கு விருப்பமான வாழ்வின் திசைகளைத் தேர்ந்தெடுக்க முடிந்தது. பேனா எனக்கு மானசீகமாகவும் லௌகீகமாகவும் மேன்மையான ஒரு வாழ்வைத் தந்து கொண்டிருக்கிறது.

    அருமை சார். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்த உங்கள் கருத்துரைகளுக்கு மிக்க நன்றி ஐயா

      Delete