Tuesday 8 May 2012

விலகிப் போய்..

unspeakable-grief-of-knowing

விலகிப் போய்க் கொண்டிருக்கிறாய் நீயென

எனக்குத் தெரியும்

மரத்துப் போகச் செய்யும் உன் கை விரல்களின்

குளிர்மை கிசுகிசுத்தது ரகசியமாய்

உன் இலக்குகள் மாறி விட்டன

என்னைக் கடந்து செல்லும்

உன் பார்வைக் கோடுகளின் தடம்

ஊர்ந்தலைகிறது ஒரு பூரானைப் போல

உன் பயணத் திசையில்

எனக்கான நிறுத்தம் எதுவுமில்லை

இத்தனைக்கும் பிறகு

உன்னை விட்டு விலகிட

நானும் அந்தரங்கமாய் ஆசைப் படுகிறேன்

சிலவேளை

என் நினைவுகளில் குரோதத்தின் சிறுவிதை

முளை விட்டிருந்தால்

என் கனவுகளில் துரோகத்தின் கரும்விஷம்

சுரந்திருந்தால்

என் இதயத்தில் கைவிடப்படுதலின்

கூர்வாள் குத்திக் கிழித்திருந்தால்

எல்லாம் எனக்கும் சுலபமாக இருந்திருக்கும்

No comments:

Post a Comment