Tuesday 10 April 2012

குழந்தைமை ரகசியம்

images (2) குழந்தைமை ரகசியம்

“குழந்தை தன்னிடத்தே ஒரு வாழ்க்கை ரகசியத்தை மறைத்து வைத்திருக்கிறது. அந்த ரகசியம் மனிதர் உள்ளத்தை மறைக்கும் திரையை நீக்க வல்லது. இந்த ரகசியத்தை உணர்ந்தால் மனிதன் தன் சிக்கல்களையும், சமூகச் சிக்கல்களையும் எளிதாக நீக்கிவிடலாம்.” - மரியா மாண்டிசோரி

தாயின் வயிற்றில் கரு உருவான சில வாரங்களிலேயே குழந்தையின் மனம் உருவாகி வளர ஆரம்பிக்கிறது. அது பெரும்பாலும் தாயின் உணர்வுகளையே ஏற்று பிரதிபலிக்கிறது. உடலாலும் உணர்வாலும் தாய் படுகின்ற இன்ப துன்பங்களை கோபதாபங்களை விருப்பு வெறுப்புகளை குழந்தையும் அனுபவிக்க நேர்கிறது. தன் பிரதிபலிப்புகளை வயிற்றுக்குள்ளேயிருந்து கொண்டே வெளிப்படுத்தவும் செய்கிறது. எனவே தான் கருவுற்ற காலத்தில் தாயின் உடல், மன ஆரோக்கியம் பாதுகாக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது. தாயின் கசப்பும், வெறுப்பும், விரக்தியும், கோபமும், இனிமையும், மகிழ்ச்சியும், கூட குழந்தையை பாதிக்கிறது.

மகாபாரதத்தில் தாயின் வயிற்றில் இருக்கும்போதே அபிமன்யு பத்ம வியூகம் பற்றி கேட்டறிந்த கதையை நாம் கேட்டிருப்போம். குழந்தையின் மனம் தாயின் வயிற்றிலேயே உருவாகி வளர ஆரம்பிக்கிறது. குழந்தை பிறந்தவுடன் பேசுவதில்லை என்ற காரணத்தினாலேயே நாம் குழந்தையின் உணர்வுகளை, பிரதிபலிப்புகளை, மகிழ்ச்சியை, அதன் கலகத்தை நாம் உணர்வதில்லை. குழந்தை தாயின் வயிற்றிலிருந்து பிறந்த கணத்திலிருந்தே புதிய கிரகத்திற்குள் அடியெடுத்து வைக்கிற பரவச உணர்வோடு எல்லாவற்றையும் உற்றுநோக்குகிறது. அவதானிக்கிறது. புரிந்துகொள்ள முயற்சிக்கிறது. புதிய புதிய அனுபவங்களை எதிர்கொள்கிறது. அதன் சாராம்சத்தைத் தனக்குள் தக்கவைத்துக்கொள்ள முனைகிறது. காலத்தின் ஒவ்வொரு கணத்தையும் முழுமையான அர்ப்பணிப்புணர்வோடு வாழ்கிறது. எப்போதும் மகிழ்வோடு வாழப் பழகுகிறது. உடலின் அத்தியாவசியத் தேவைகளை தன் அழுகையின் மூலம் உணர்த்துகிறது. தன் மீது அன்பு கொண்டவர்களைப் போற்றுகிறது. ஒவ்வொரு நாளையும் புதிது புதிதாக வாழ்கிறது. புத்தம் புது மலர் போல பூத்துக் குலுங்குகிறது. தன் ஒவ்வொரு செய்கையையும் தானே வியக்கிறது. அதை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் அந்தச் செய்கையை இன்னும் முதிர்வடையாத தன் ஞாபகக் கிடங்கில் சேர்க்கிறது. அந்தச் செய்கையினால் விளையும் இன்பமோ, துன்பமோ அதையும் தன் உணர்வுச் சேகர கோப்புகளில் பதிவு செய்கிறது.

ஒரு கண்டுபிடிப்பாளனைப் போல இந்த உலகைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொள்கிறது. அறிதலின் இன்பத்தை அனுபவிக்கிறது. குழந்தைமையின் முதலும் முடிவுமான நோக்கம் இன்பமே. வாழ்வை இன்பமாகக் கழிக்கவே விரும்புகிறது. குழந்தை இன்பத்தைக் கண்டடைகிற முயற்சிகளில் தான் உலகை தன் சுற்றுப்புறத்தை தன் சக ஜீவிகளை அறிந்து கொள்கிறது. எல்லாவற்றையும் அறிந்து கொள்வதற்காக அது ஒரு ரகசியத்தை வைத்திருக்கிறது. குழந்தைகள் மட்டுமல்ல இந்தப் பூவுலகில் பிறக்கிற ஒவ்வொரு இளம் உயிரும் அந்த ரகசியத்தை அறிந்து வைத்துள்ளது. அந்த வாழ்க்கை ரகசியத்தின் மூலமாகவே வாழ்வைப்புரிந்து கொள்கின்றனர். அந்த வாழ்க்கை ரகசியம் உழைப்பு இந்த அற்புதமான ரகசியத்தின் மூலமாகவே அதாவது தொடர்ந்த இடைவிடாத ஒழுங்கமைக்கப்பட்ட உழைப்பின் மூலமாகவே தான் மகிழ்ச்சியையும், உடல்நலத்தையும், புத்துணர்வையும் பெறுகிறது. உழைப்பின் மீது ஆசைகொள்வது குழந்தையின் அடிப்படை இயற்கையுணர்வாகும் உண்மையில் குழந்தைகளின் செயல்பாடுகளில் கோடிப் புதையல்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைத் தேடிக் கண்டுபிடிக்கிற பொறுமை, திறமை பெற்றோர்களுக்கும் இல்லை, மற்ற பெரியவர்களுக்கும் இல்லை.

தாயின் வயிற்றிலேயே இந்த உழைப்பு ஆரம்பமாகி விடுகிறது. தாயின் வயிற்றிலிருந்து வெளிவந்த பின்னால் உழைப்பு தீவிரமடைகிறது. உழைப்பின் தீவிரம் அதன் வாழ்வைக் களிகொள்ளச் செய்கிறது. அந்த இன்பமே மீண்டும் மீண்டும் உழைப்பின் மீது குழந்தையை ஈடுபாடும் பெருவிருப்பும் கொள்ளச்செய்கிறது.

ஆனால் பெரியவர்கள் குழந்தைகளை பெரும்பாலும் புரிந்துகொள்ளத் தவறுகிறார்கள். குழந்தையை ஏதும் இல்லாத எதுவும் அறியாத ஒரு வெறும் ஜீவி என்று நினைக்கிறார்கள். இந்தத் தவறான எண்ணத்தின் மீது நின்று கொண்டே குழந்தைகளை பார்க்கிறார்கள். வேறெங்கும் செலுத்த முடியாத அதிகாரத்தைக் குழந்தைகள் மீது செலுத்த முனைகிறார்கள். தான் தீர்மானிக்கிற, தனக்கு விருப்பமான தனக்குத் தெரிந்த நல்லது கெட்டதுகளைக் குழந்தையிடம் திணிக்கிறார்கள். தனக்குப் பிடிக்காத உருளைக்கிழங்கு குழந்தைக்கும் பிடிக்காது என்று நினைக்கிறார்கள் தனக்குப் பிடித்த கோகோ கோலாவை குழந்தையும் சாப்பிடவேண்டும் என்று விரும்புகிறார்கள். தன் சுயநலத்திற்காக குழந்தைகளை தொலைக்காட்சிப் பெட்டிகளிடம் ஒப்படைக்கிறார்கள். பின்பு அதனிடமிருந்து குழந்தைகளை மீட்கப் போராடுகிறார்கள். குழந்தைகளை ஒரு பொருளாகப் பாவிக்கிற எண்ணமே இப்படி அவர்களைக் கையாளச் சொய்கிறது. குழந்தைகள் உடனடியாக வாய் பேசமுடியாது என்பதாலேயே அதற்கு யோசிக்கத் தெரியாது, சிந்தனை கிடையாது, நல்லது கெட்டது தெரியாது என்று குழந்தைகள் சார்பாக அவர்களே முடிவெடுக்கிறார்கள். இறுதியில் குழந்தைகளைத் தனக்குச் சொந்தமான ஒரு பொருள் என கருதி, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற உரிமையை அவர்களே எடுத்துக்கொள்கிறார்கள். குழந்தையை அவர்களுடைய சொந்த படைப்பாக எண்ணிக்கொள்கிறார்கள்.

பாவம் குழந்தைகள் தாங்கள் ஒரு தனித்துவமிக்க தனி உயிரி என்ற உரிமையை இழக்கிறார்கள். தங்களுக்குத் தேவையானதைப் பெறுகிற, தங்களுக்குத் தேவையில்லாததை மறுக்கிற சுதந்திரத்தை இழக்கிறார்கள். தங்களுடைய அறிதலின் தாகத்தைக் கட்டுப்படுத்துகிற, ஒடுக்குகிற அதிகாரத்தின் கரங்களுக்குள் உள்ளொடுங்கிப் போகிறார்கள். இந்த உள்ளொடுங்கலே குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்போது சமூகத்தில் நடக்கிற எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்கிற மந்தமான மனநிலையைத் தோற்றுவிக்கிறது. எதையும் கேள்வி கேட்கத் துணியாத கோழைத்தனத்தை உருவாக்குகிறது. எதையும் மறுக்கக்கூடிய உரிமையை இழந்து தவிக்கிறார்கள். கல்விக்கூடங்களும் இதற்கு உடந்தையாக செயல்பட்டு குழந்தைகளின் இயல்பான மேதைமையைக் கட்டுப்படுத்தி சாதாரணமானவனாக்கு (ஹஏநுசுஹழுநு) வதற்காக மெனக்கெடுகிறது. சொல்வதைத் திரும்பச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாக்குவதற்கு தன் முழு பலத்தையும் பிரயோகிக்கிறது.

குழந்தைகள் இதனால் மனம் வெதும்பி தன் இயல்பான அறிதிறனையும், மேதைமைiயும் இழக்கிறார்கள். அரும்பிலேயே கருகச் செய்யும் நடவடிக்கைகளால் தாங்கள் யாரைச் சார்ந்து இருக்கிறார்களோ அவர்கள் சொன்னபடி நடக்க ஆரம்பிக்கிறார்கள். தங்களுடைய அடிப்படை இயல்பான மகிழ்ச்சிக்கான அறிதலுக்கான உழைப்பையும், அதன் மூலம் கிடைக்கிற உள்ளொளியையும் மறந்து போகிறார்கள். இப்படி குழந்தைகளின் குழந்தைமையை அதன் ரகசியக் கனவுகளையும் கருகச் செய்துவிட்டு பெரியவர்கள் “உன்னைய வளர்ப்பதற்காக என்ன பாடுபட்டிருக்கேன் தெரியுமா?” என்று அங்கலாய்க்கிறார்கள். விநோதத்தைப் பாருங்கள்.

உயிரின் இயல்பான படைப்பூக்க, உணர்வான உழைப்பு தான் குழந்தைமையின் ரகசியம். குரங்கிலிருந்து மனிதனாக பரிணாம வளர்ச்சியடைவதற்கு உழைப்பு தான் முக்கியமான மூலகாரணம் என்று மார்க்சியம் சொல்வதைப் போல குழந்தைகள் உழைப்பதின் மூலமே தங்களின் உள்ளொளியை உள்ளுணர்வை, அறிதிறனை, மேதைமையை மகிழ்ச்சியை வளர்க்கிறார்கள். உழைப்பு அதுதான் எத்தனை அற்புதமான விசயம்! குழந்தைகளை உற்றுநோக்குவோம். நம் அறியாமைகளை அகற்றுவோம்..

No comments:

Post a Comment